நீயில்லாத் தனிமை




உன் நினைவுகளும்,
கிளம்புகையில் நீ கலைத்துச் சென்ற
என் கேசமும்
அப்படியே இருக்கின்றன.

கொல்லை புறத் தோட்டத்திலுள்ள
உன் கால்த் தடங்களில் நீர் நிரப்பி
என் தனிமையை ஒரு செடியாய் வளர்க்கிறது,
சற்று முன் பெய்யத் துவங்கிய மழை.

நிகழ்கால நிமிடங்களை
நாம் கூடிக் களித்த கணங்களின்
போலியான நீட்சியாய் மாற்ற
பகல் கனவின் வழியே முயற்சித்துத் தோல்வியுறுகிறேன்.

என்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை
நீ இல்லாத இந்தத் தனிமையை...
வேடிக்கை பார்ப்பதைத் தவிர!

துப்பட்டா




சில நாட்களில் பூக்கள் நிரம்பியதாய்,
சில நாட்களில் நட்சத்திரங்களை ஒட்ட வைத்தும்,
மற்றுமொரு நாளில்...
வானவில்லில் இருந்து தேர்ந்தெடுத்த ஒற்றை நிறமாக.

எதுவாயினும் மெருகேறுவது உன் துப்பட்டாவில்
காணக் கிடைக்கையில் தான்!!!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட