அற்புதமான ஒரு திரைப்படம் - "Spring, Summer, Fall, Winter... and Spring"

முடிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் 2009-ஆம் வருடம், அதற்கு முந்தைய சில வருடங்களைப் போல இல்லாமல், பல திருப்பங்களும் நிகழ்வுகளும் (எனக்கு தனிப்பட்ட முறையில்) கொண்டிருந்தது. இவ்வருடத்தில் எந்தவொரு முன் திட்டங்களுமின்றி இயல்பாய் வந்த ஒரு பழக்கம், 'நல்ல படங்கள் (அ) உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது'.சில ஆண்டுகளுக்கு முன், ஆனந்த விகடனில் செழியன் எழுதிய 'உலக சினிமா' தொடர்தான் எனக்கான முதல் அறிமுகம். பின் இணையமும், தமிழ் வலைப்பூக்களும்.'உலக சினிமா' தொடர் வாசிக்கும் பொழுது அப்படங்களை பார்க்க ஆரம்பிக்காவிட்டாலும் இவ்வருடம் எல்லாம் ஒன்றாய் அமைந்து வந்ததில் பார்க்கத் துவங்கி விட்டேன்.

"டேய்.. நீ மத்தவங்களுக்குதாண்டா மாஸ்... எனக்கு வெறும் தூசு...தூசு!" போன்ற சிரிப்பூட்டும் பஞ்ச் டயலாக்குகள் கொண்ட அதீத மொக்கை மசாலா படங்களும், மோசமான திரையரங்குகளும் (பெரும்பாலான சமயங்களில் இவிய்ங்களே 80/100 ரூபாய்க்கு பிளாக்ல டிக்கெட் விப்பாய்ங்க...சிறந்த உதாரணம்: கே.கே நகர் உதயம் )ஏற்படுத்துகிற சலிப்புணர்வு நிரம்பிய எந்த ஒரு ஜீவராசிக்கும் உள்ள மிகச் சிறந்த மாற்று வழி 'உலக சினிமா'. சமீப காலங்களில் நல்ல தமிழ் படங்கள் வருகிற ஆரோக்கிய சூழலையும் மறுக்க முடியாது, எனினும் அது மிக மிகக் குறைந்த சதவீதமே.

இவ்வருடத்தில் பார்த்த மிக சிறந்த ஒரு படத்தை பற்றிய என் பார்வை கீழே.

Spring, Summer, Fall, Winter... and Spring

"சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்

சிறுகச் சிறுக விடுத்து
ச் செல்வது
சாம்பலை மட்டுமே!
"

என்றொரு ஜப்பானிய ஜென் கவிதை உண்டு.(யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்தது). மனிதன் தன் வாழ்வில் அன்பு,எதன் மீதும் பற்று இல்லாமல் வாழ முடியுமா? அப்படி வாழ்வதுதான் துன்பமின்றி இருப்பதற்கான வழி என்ற புத்த மத கோட்பாட்டை மிக அற்புதமான முறையில் விவரிக்கிறது இந்த கொரிய மொழி படம். மனித வாழ்வை நான்கு படி நிலைகளாக பிரித்து, அவற்றை கால நிலை சுழற்சியிலுள்ள நான்கு பருவங்களுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் உக்தியில், இந்த படம் மிக சிறந்த திரை அனுபவத்தை தருகிறது. படத்தின் மொத்த வசனங்களையும் ஒரு வெள்ளை காகிததில் ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். இயக்கியவர் - மிக புகழ் பெற்ற கொரிய இயக்குனர் கிம் கி டுக். (Kim ki Duk). அசாத்தியமான அழகியல் உணர்வுடன் கூடிய இப்படத்தின் ஒளிப்பதிவை போன்று இது வரை நான் எந்த படத்திலும் கண்டதில்லை. ஒளிப்பதிவு : Dong-hyeon Baek




வசந்த காலம்:
இரு பசுமையான மலைகளுக்கிடையே அமைதியான ஓர் ஏரி.அந்த ஏரியின் நடுவில் மரத்தாலான சிறிய அழகிய மிதக்கும் வீடு (அ) ஆசிரமம். அங்கிருக்கும் வயதான புத்த துறவியும், ஒரு சிறுவனும் காலையில் எழுந்து படகில் கரைக்குச் சென்று மருந்திற்கான மூலிகைகளை பறித்து விட்டுத் திரும்புகின்றனர். மறுநாள் சிறுவன் பொழுதைக் கழிக்க கரைக்கு தனியே வந்து சுற்றியலைகிறான். அங்கிருக்கும் ஒரு குட்டையில் தான் பிடித்த ஒரு மீன், ஒரு தவளை மற்றுமொரு பாம்பு என ஒவ்வொன்றின் உடலிலும் நூலால் கல்லை கட்டி விடுகிறான். இவை துன்பபடுவதை கணடு சிறுவன் சிரிக்க, இதை மறைந்திருந்து துறவி கவனிக்கிறார். இரவு சிறுவன் தூங்கும் போது அவன் முதுகில் துறவி ஒரு பெரிய கல்லை கட்டுகிறார். காலையில் எழும் சிறுவன் துறவியிடம் கல்லை எடுத்து விடுமாறு கெஞ்சுகிறான். "முதலில், உன்னை போன்று சிரமபடும் அந்த உயிரினங்களை விடுவி. ஆனால் எதவாது ஒன்று இறந்திருந்தாலும் அந்த சுமை வாழ்நாள் முழுதும் உன் மனதில் இருந்து நீங்காது" என்கிறார். தவறை உணர்ந்த சிறுவன் மீன்டும் குட்டைக்கு வந்து தேடி தவளையை விடுவிக்கிறான். மீனும், பாம்பும் இறந்து கிடப்பதை கண்டு வருந்தி அழுகிறான். இதையும் துறவி மறைந்திருந்து பார்த்து கொண்டிருக்கிறார்.

கோடைக்காலம்:
சிறுவன் இப்போது இளைஞன் (அ) இளம்துறவி ஆகியிருக்கிறான். ஒரு பெண்மனி தனது இள வயது மகளுடன், மூத்த துறவியை சந்திக்க வருகிறாள். தனது மகள் சிறிது உடல் நலம் குன்றியுள்ளதால், அவளை சிகிச்சைக்காக அங்கேயே விட்டு செல்கிறாள். மறுநாள், இளம்பெண் தனியே மழையில் நனைந்து கொண்டு வெளியில் அமர்ந்திருப்பதை கண்ட இளைஞன் ஒரு கூடையை எடுத்து, அவள் தலைக்கு மேல் குடை போல் பிடிக்க, அவள் புன்னகைக்கிறாள். பின்பொரு நாள் அவள் உடை மாற்றுகையில், எதேச்சையாய் பார்க்க நேர்ந்த இளம்துறவியின் எண்ணம் அலைபாயத் தொடங்குகிறது.மறுநாள் இளைஞன் படகில் கரைக்கு செல்லும் போது 'நீயும் வருகிறாயா?' என கேட்க அவள் மௌனமாக படகில் ஏறி அமரவும், கரைக்கு செல்கின்றனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி ஒரு சிற்றருவியின் அருகே ஓரிடத்தில் அவளை புணர்கிறான். அவர்களுக்குள் ஈர்ப்பு அதிகமாகிறது. பின்பொரு நாள், துறவி தூங்கி கொண்டிருக்க, இளைஞனும் யுவதியும் விடிவதற்கு முன்பே படகிலேறி ஏரியை சுற்றுகின்றனர். பின் படகிலேயே இருவரும் புணர்ந்து களைத்து உறங்குகின்றனர்.காலையில் இதை கண்ட துறவியிடம், இளைஞன் மன்னிப்பு கேட்கிறான். 'இது இயற்கைதான்' என்கிறார். துறவி பின்பு அந்த பெண்ணிடம் திரும்பி, 'இன்னும் உனக்கு உடல் நலமின்றி இருக்கிறதா?' என கேட்க, அவள் 'இல்லை' என்கிறாள். 'நீ கிளம்பலாம்' என்கிறார். பெண் கிளம்ப இளைஞன் அதை தடுக்க முடியாமல் தவிக்கிறான். அவள் சென்ற மறுநாள் விடிவதற்கு முன்பே, தூங்கும் துறவியை வணங்கி, பின் புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு அவளைத் தேடிக் கிளம்புகிறான்.

இலையுதிர்க் காலம்:
துறவி இன்னும் முதுமையடைந்து தனியே வசிக்கிறார். ஏதொ ஒரு பொட்டலத்தை பிரிக்கும் போது அதை சுற்றியுள்ள செய்தி தாளில் 'தன் மனைவியை கொன்று விட்டு தப்பித்த கணவன்' என்ற செய்தியுடன் இளம் துறவியின் புகைபடத்தை காண்கிறார். மறுநாள் நாகரீகமான இளைஞன் தோற்றத்தில் தன்னுடைய சீடன் ஆசிரமத்திற்கு வருகிறான். அவனிடம் துறவி பேசுகிறார்.'அவள் மேல் மிகுந்த அன்பிருந்தது. அவள் இன்னொருவனுடன் செல்ல முயன்றதால் கொன்றேன்'என்று கோபத்தில் கத்துகிறான். அவன் மன அமைதிக்காக, ஒரு புத்த மத சூத்திரத்தை மர பலகையில் எழுதி விட்டு, 'இதன் ஒவ்வொரு எழுத்துக்களையும் கத்தியால் கீறி செதுக்கு. அதன் வழியே உன் ஆத்திரம் குறையும்' என்கிறார் துறவி. சீடன் செதுக்க துவங்குகிறான். அவனை கண்டுபிடித்து கைது செய்ய இரு போலீஸ் அதிகாரிகள் வந்து விடுகின்றனர்.'இப்பணி அவனுக்கு மன அமைதியை கொடுக்கும். அவன் அதை முடித்ததும் கைது செய்யுங்கள்' என துறவி கேட்டு கொள்கிறார். இரவு முழுதும் எழுத்துக்களை செதுக்கி, களைத்து தூங்கி சரிகிறான். காலையில் அவனை கைது செய்து கூட்டிச் செல்கின்றனர். பின், துறவி படகில் விறகுகளை அடுக்கி தீயிட்டு, தன் கண்களிலும், வாயிலும் எழுத்துகள் எழுதப்பட்ட காகிததை இறுக்கமாக ஒட்டி, தீயின் மேல் அமர்ந்து தன் உயிரை மாய்க்கிறார்.

குளிர் காலம்:
பனி மழை பெய்து கொண்டிருக்க, ஏரி பனிப்பாளமாக உறைந்திருக்கிறது. சிறை சென்ற இளைஞன், தனது நடுத்தர வயதில் மன முதிர்வுடன் ஒரு துறவியாக விடுதலையாகி ஆசிரமத்திற்கு வருகிறார். மூத்த துறவி இறந்ததை உணர்ந்து படகை வணங்குகிறார். பின் ஆசிரமத்திலுள்ள ஒரு புத்தகத்தை எடுத்து அதிலுள்ள புத்த மத தியானம் மற்றும் தற்காப்பு முறைகளை தீவிரமாக கற்கிறார். பின்பொரு நாள் கைகுழந்தையுடன் தன் முகத்தை மறைத்தபடி ஆசிரமத்துக்கு ஒரு பெண் வருகிறாள்.புத்தர் சிலை முன் மண்டியிட்டு அழுகிறாள். அன்றிரவு தங்கும் பெண், தன் குழந்தையை அங்கேயே விட்டு வெளியேறும் போது, பனி ஏரியின் ஒரு குழிக்குள் தவறி விழுந்து இறக்கிறாள். துறவி குழந்தையை எடுத்து வளர்க்கிறார். தனது சிறு வயது தவறுகளுக்காக வருந்தி ஒரு பெரிய கல்லை இடுப்பில் கட்டி கொண்டு கையில் புத்தர் சிலையுடன் கடினமான பாதையில் காயங்களுடன் மலையேறுகிறார். மலையில் ஓரிடத்தில் அந்த கல்லை பீடமாக்கி அதன் மேல் புத்தர் சிலையை வைத்து வணங்குகிறார்.

மற்றுமொரு வசந்த காலம்:
நடுத்தர வயது துறவி முதுமையடைகிறார். அக்குழந்தை சிறுவனாகி விளையாடிக் கொண்டிருக்கிறான். ஒரு ஆமையைக் கையிலெடுத்து குச்சியால் குத்தி பார்க்கிறான். துறவியின் சிறு வயது மன நிலை இப்போது அச்சிறுவனிடத்தில். இந்த வாழ்க்கை சுழற்சியைக் காணும் மௌன சாட்சியாக மலை முகட்டில் புத்தர் சிலை மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருக்க படம் நிறைவடைகிறது.



ஒவ்வொரு பருவத்திலும் நடக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வைப் பற்றிய ஓர் ஆழ்ந்த பார்வையை முன் வைக்கிறது. படகு, துறவி இறந்ததும் நீரிலிருந்து வரும் பாம்பு, இளைய பருவத்தில் வரும் சேவல்.. என அர்த்தமுள்ள குறியீடுகள் படம் முழுதும் வருகின்றன. ஜென் கவிதைகள் சில வரிகளில் ஆழ்ந்த அர்த்தங்களை உணர்த்தும். அந்த வகையில், இப்படம் ஒன்றரை மணி நேர ஜென் கவிதை! படம் நிறைவடையும் போது சொல்லில் விவரிக்க இயலா ஓர் உணர்வு மனதில் நிரம்பும். இன்னும் பேச்சு எதற்கு? படத்தை ஒரு முறை பார்த்து, உணருங்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! :)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 3rd AC டிக்கெட்டும் ஐம்பது ரூபாய் கைப்பணமும்

இதே மாதிரி கொஞ்சம் இடைவெளி கூட இல்லாம, எப்பவுமே ஆணி புடுங்கிட்டு இருந்தா, அடுத்த பிறவி முழுவதும் புதுகை புயல் J.K. ரித்தீஷ் நடித்த படங்களை மட்டுமே கண்டு இன்புறுவாய் என, கனவில் ஒரு துர் தேவதை சபித்ததையடுத்து, பதறிப்போய் ஊருக்கு கிளம்ப தீர்மானித்தேன்.

IRCTCல் துலாவியபோது தற்செயலாக சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் AC டிக்கெட் வெறும் 382 ரூபாய் மட்டுமே என கண்டு இன்ப அதிர்ச்சி. சாதாரண ஸ்லீப்பர் வக்குப்பு டிக்கெட்டை விட ரூ.100 மட்டுமே அதிகம் கொடுத்து 3rd AC எடுத்து விட்ட, எனது ராஜதந்திரத்தை கண்டு எனக்கே வியப்பு தாங்க முடியவில்லை.

பயண நாளன்று மாலை. அலுவலக நண்பர் 'நான் உன்னை கிண்டில இறக்கி விடுறேன்யா' என சொல்ல, கிண்டியிலிருந்து 20 நிமிடத்தில் எக்மோரை அடையலாம் என மனக்கணக்கு போட்டு தெனாவெட்டாக தாமதமாக 7.20 க்கு கிளம்பினேன் . 8.25-க்கு நம்ம ட்ரெய்ன். ஒரு மணி நேரத்தில் O.M.R ரோட்டிலிருந்து எக்மோர் போகணும்!! அதுவும் பரபரப்பான மாலை நேர போக்குவரத்து நெரிசலில்.

நன்பருடன் பைக்கில் கிளம்பியதும் சிறு தூரல். "செம ரொமான்டிக் ஒபனிங்கா இருக்கே!"னு நினைச்சு மூனு நிமிஷத்துல, டைடல் பார்க் சிக்னலில் செம ட்ராபிக். தூரல் மழையாக மாறி புரட்ட ஆரம்பிச்சிருச்சு.

"என்னயா... இப்படி பெய்யுது?!?!"

"சரி ராம்... கிண்டி வரைக்கும் போக வேண்டாம். மத்திய கைலாஷ் - கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன்ல என்னை இறக்கி விட்டுட்டு, நீங்க ஒரங்கட்டிட்டு நனையாம இருங்க. நான் அங்கேயிருந்து எக்மோர் போயிடறேன் "

கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன். மணி 7.35
இந்த ரூட் கிண்டி மாதிரி கிடையாது. எக்மோர் போகனும்னா ரெண்டு ட்ரெய்ன் மாறணும். 7.45 MRTS ட்ரெய்ன் இன்னும், 7,50 ஆகியும் வரலை.

'இவிய்ங்க ஏன் இப்படி ரூட் வெச்சிருக்காய்ங்க... எக்மோரையும் பறக்கும் ரயில் ரூட்ல கொண்டு வந்திருக்கலாம்... முட்டா பசங்க'
'சரியான நேரத்துக்கு வரவே மாட்டாய்ங்க... லூ#$% *&^@$'
'பேசமா வெளில போய் ஆட்டோ பிடிக்கலாமா?!?! இந்த மழைல ஏதாவது மொக்கை ட்ராபிக்ல மாட்டிடோம்னா?? ட்ரெய்ன்லயெ போவோம் '

இப்படி திட்டிட்டே இருக்க, 7.58-க்கு சாவகாசமா வருது.
'இன்னும் 25 நிமிஷத்துல எக்மோரா? ஆவுறதில்லை'னு நினைச்சிட்டு உள்ள ஏறிட்டேன். பேருதான் பறக்கும் ரயில். நம்ம ஊருக்குள்ள ஒடுற மினி பஸ் மாதிரி 30 கி.மீ வேகத்துலதான் போறாய்ங்க.
நாலு ஸ்டேஷன் தான்டிண பிறகு மழையே இல்ல.

'எக்மோருக்கு ரெண்டாவது ட்ரெய்ன் பிடிக்கிறதுக்கு பதிலா, பார்க் ஸ்டேஷன்ல இறங்கி ஆட்டோ பிடிக்கலாம்.'
'இல்ல..இல்ல.. பார்க்குக்கு முன்னாடி சிந்தாதிரிபேட்டைலயே இறங்கினா தூரமும், நேரமும் குறையும்'


சிந்தாதிரிபேட்டை. மணி 8.18.
'இன்னும் ஏழு நிமிஷம் தான் இருக்கு. ஓட்டத்தை ஆரம்பிடா கைப்புள்ள'.
ஆது ஒரு ஈயாடுற ஸ்டேஷன். அங்கேயும் விஜயகாந்த் பட போலீஸ் சேஸிங் சீன் மாதிரி நான் ஓட, அங்க இறங்குன நாலு பேரும் என்னை ஒரு மாதிரியா பார்த்தாய்ங்க.

வெளில வந்து பார்த்தா ஒரே ஒரு ஆட்டோ. காது குடைஞ்சிட்டு இருந்த ஆட்டோக்காரரை எக்மோர்னு சொல்லி கிளப்பியாச்சு.

எக்மோர் வந்ததும் 30 ரூபாயை அவர் கையில் திணித்து விட்டு, மெதுவாக சென்ற ஆட்டோவிலிருந்து ரன்னிங்ல இறங்கும் போது 8.25.
"இன்னிக்கு ஆப்புதாண்டா"னு சொல்லிட்டே எந்த பிளாட்பார்ம்னு பார்க்க போனா, அந்த போர்டுல நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பேரே இல்ல. விசாரணை கவுண்டர்-ல கேக்கலாம்னு பார்த்தா ஏறகெனவே ஆறேழு பேர் சுத்தி நிக்கிறாய்ங்க.
'சரி... உள்ள போயி யார்ட்டயாவது கேக்கலாம்'

நுழைந்ததும் முதலில் இருக்கும் பிளாட்பார்ம்ல வரிசையா இருக்குற LED display ல வண்டி எண் 0607. 'எங்கேயொ பார்த்த நம்பர் மாதிரி இருக்கெ ?!?!'
பக்கத்துல இருக்குற ட்ரெய்ன் கோச்ல போர்டு 0607 சென்னை <<==>> நாகர்கோவில்.
'சூப்பர் அப்பு..'... அப்போ நம்ம நாலாவது கோச் எங்க?!?!. உத்து பார்த்தால் அட அதுவும் இது தான். உள்ள ஏறின உடனே வெளிய திரும்பி பார்த்தால் வண்டி நகர ஆரம்பிச்சிருச்சு. மணி 8.26!!!


ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாட!!!


பந்தாவா உள்ள போறேன். அந்த கோச்ல கடைசி சீட் எனக்கு!. பார்த்ததும் செம கடுப்பு. ஒவ்வொரு compartment லயும் பக்கத்துக்கு மூணு அப்படின்னு ஆறு சீட் இருக்கும் ஆனா இதுல ஒரு பக்கம் இருக்குற மூணு சீட்டோட அந்த கோச் முடிஞ்சு போச்சு. அதாவது சாதரண compartment ல நடுவுல ஒரு தடுப்பு வெச்சா எப்டி இருக்கும்? செம இடைஞ்சல். ஜெயில்ல இருக்குற பீலிங்.

போர்வை தலையணை எல்லாம் தருவாய்ங்கனு பார்த்தா, 25 ரூபா தரணுமாம். சட்டை பையை துலாவினதும்தான் தெரிஞ்சது நம்ம கிட்ட மொத்தம் இருக்கிறதே 50 ரூபா. கிளம்பின அவசரத்தில ATM ல எடுக்க மறந்துட்டேன். இதுல நான் சாப்பாடு + தண்ணி பாட்டில் + போர்வை தலையணை வாங்கணும். முதல் ரெண்டு வாங்கி முடிச்சதும் மிச்சம் இருந்தது ஏழு மதிப்புள்ள இந்திய ரூபாய்கள் .
சரி... கைய முட்டு குடுத்து முரட்டு தனமா தூங்குவோம்னு மனசை தேத்தியாச்சு.

அப்பப்போ பக்கத்துல இருந்த ஒரு ஆன்ட்டி & பக்கத்துல இருந்த இன்னொருத்தர் கிட்ட பேசிட்டு வந்தேன். நடு சாமத்துல குளிர் தாங்க முடியாம வெளிய போயி நின்னுட்டு இருக்கும் போது நம்ம வயசுல ஒரு இளைஞர் பேச்சு துணைக்கு கிடைச்சார். அவர் ரயில் என்ஜின் துணை டிரைவராம். அவரும் மதுரைக்கு பயணித்து கொண்டிருந்தார். பல சுவாரசியமான விஷயங்களை சொன்னார்.

## இருக்கிறவய்ங்கள்ள பாதி பேரு(எல்லாரும் நம்ம தமிழ் மக்கள் தான் ) இங்கிலீஷ் பேசி டார்ச்சர் பண்றாய்ங்க. எப்படித்தான் இந்த ஒரு மனநிலை வருதுன்னு தெரியல. போலியான மேட்டுக்குடித்தனம்!!! "இவிய்ங்களையெல்லாம் ..........................." னு ஒரு உன்னதமான தண்டனைய மனசுல நினைச்சுகிட்டேன்
"இவிய்ங்க
(நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்) எப்பவுமே லேட்டாதான் போவாய்ங்க தம்பீ." என்று மதுரை தமிழில் பேசிய நபர் மட்டுமே ஆறுதல்.

## டெல்லியில் வசிக்கும் ஒரு அரசு அதிகாரியின் தமிழ் குடும்பம், சொந்த ஊரான நெல்லைக்கு செல்கிறது. அவருடைய மனைவியும், மகளும் வட இந்தியா/ டெல்லி பெருமைகளை சக பயணிகளிடம் வாய் வலிக்காமல் மொக்கை போட்டு கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் தமிழ். ஆனால் இவர்கள் பேசியதில் 70% ஆங்கிலம், 20% ஹிந்தி , 10% தமிழ். வட இந்திய நவராத்திரி கொண்டாட்டக்களில் துவங்கி பஞ்சாபி தாபா அடுப்பு எப்படி செய்கிறார்கள் வரை அவிய்ங்க அலப்பறை தாங்கல.

## ரயில் என்ஜின் துணை டிரைவருடன் பேசியதிலிருந்து,

# தற்போது சென்னை-விழுப்புரம் & மதுரை-திண்டுக்கல் மட்டுமே இருவழிப்பாதை. சென்னை - மதுரை முழுதும் இரு வழி ரயில் பாதை மற்றும் Electrification ஆகி விட்டால் ஆறு மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு போகலாம். சுமார் ஒன்றரை வருடத்தில் இப்பணி முடியலாம்.

# தற்போது கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் செயல்பட ஆரம்பித்ததும், அது ரயில்வேயின் கீழ் வராது. அது தனி சுய அமைப்பு .

# வயதான ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலானோர் மிகவும் பொறுப்பில்லாத மனநிலையுடன்தான் நடந்து கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் இளையவர்கள் பரவாயில்லை.

# இந்திய ரயில்வே துறை பயணிகள் போக்குவரத்தை ஒரு சேவையாகத்தான் செய்கிறது. அவர்களின் லாபம் சரக்கு போக்குவரத்தில்தான் அதிகம்.


சிறப்பு ரயில் என்பதால், நின்னு நின்னு இரண்டு மணி நேர தாமதமாக மதுரை வந்து சேர்ந்தது. அங்கிருந்து ஊருக்கு போகும் பஸ்சும் மெதுவாகவே சென்றது. (நம்மளை சுத்தி சதி பண்றாய்ங்களோ!?!?)

வழக்கமா ஊருக்கு போக11 மணி நேரமாகும். எல்லா டிரைவர்களின் புண்ணியத்திலும் வீடு வந்து சேர 14 மணி நேரம் ஆச்சு!!

மதுரைகாரர் சொன்ன "இவிய்ங்க எப்பவுமே லேட்டாதான் போவாய்ங்க தம்பீ."... ஊருக்கு போன பிறகும் கேட்டுட்டே இருந்தது!

அக்னி நட்சத்திரம் முடியும் வேளையில், அனல் பறக்கும் சில மொக்கைகள்

சென்ற வாரம் ஒரு சுப யோக சுப தினத்தில் என் ஆருயிர் தங்கையின் திருமணம் இனிதே நடந்தேறியது.ஒரு பொறுப்பான(?!) உடன்பிறப்பாய் என்னால் முடிந்த வரை கடமைகளை ஆற்றினேன். சாஸ்திரம், சம்பிரதாயம்-னு எத்தனை விஷயங்கள்... பெரும்பாலும் எல்லாமே பொண்ணு வீட்டுக்காரய்ங்களை உசுரை எடுக்குற மாதிரியே இருக்கு... ஷ்ஷ்ஷ்ஷ்... கண்ணை கட்டிருச்சு!!! சில சமயங்கள்ல இந்த மாதிரி சம்பிரதாயம் எல்ல்லாம் இன்னைக்கு சூழல்லயும் நாம பின்பற்றானுமா -ன்னு கேள்விகள் தோணிட்டு இருந்தது...

ம்ம்... அப்புறம் ஒரு மேட்டர்... மூச்சு முட்டுற வேலைகளுக்கு நடுவுல சில சமயம் மண்டபத்தை சுத்தி நோட்டம் விட்டதுல, மாப்பிள்ளை வீட்டு சொந்தக்கார பொண்ணு ஒண்ணு செம அழகா குடும்ப குத்து விளக்கு மாதிரி நின்னுட்டு இருந்ததை பார்துட்டோம்ல... அப்போ எந்த விதமான 'ஆக்கப்பூர்வமான நடவடிக்கை'யும் எடுக்கல (அல்லது) எடுக்க நேரம் இல்ல. அப்புறம் ஒரு நாள் தங்கச்சி கிட்ட அந்த பொண்ணை பத்தி கேட்டு, (ஏன்? எதுக்கு? ன்னு 108 எதிர் கேள்வி வேற ) கொஞ்ச தகவல் கிடைச்சது.


எல்லாம் 'smooth'ஆ இருக்கு. ஆனா நம்ம ராசியை நினைச்சாதான் டெர்ரர் ஆ இருக்கு. எந்த பொண்ணை சைட் அடிச்சாலும் அதிகபட்சம் ஆறு மாசத்துக்குள்ள அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுது... என்னத்தை சொல்ல!!!
ஆகவே பிரியமானவர்களே... பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே அந்த பொண்ணு கொஞ்ச நாள் 'Single' ஆகவே இருக்க வேண்டுமென எனக்காக ஆண்டவரிடம் மன்றாடி பிரார்த்தியுங்கள். நம் கூட்டு பிரார்த்தனைக்கு ஆண்டவர் மனம் இரங்குவாராக.

அட... ஆண்டவர் ஒன்னும் பண்ணலேன்னாலும் அந்த பொண்ணோட அப்பாவாவது மனசு இறங்கட்டும். So...நீங்க பிரார்த்தனை பண்ணுங்க. இது நடந்துட்டா அந்த கேப்-ல போர்க்கால வேகத்தில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள இந்த அரசு( நான்தானுங்க ) உறுதிபூண்டுள்ளது .... ம்ம்ம்... பார்க்கலாம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


இவிய்ங்க ஏன் இப்படி இருக்காய்ங்க?

கடந்த முறை தி. நகர் போனப்போ சரவணா ஸ்டோர்ஸ்ல சிலர் பண்ணுன அட்டூழியத்த பார்த்துட்டு தோணின கேள்வி இது. தி நகர் ல துணி வாங்கலாம்... நகை வாங்கலாம்... சமையலுக்கு வெண்டைக்காய், தக்காளி வாங்கணும்னா கூட அவ்வளவு கூட்டத்தையும் தாண்டி வந்து சரவணா ஸ்டோர்ஸ்ல தான் வாங்கனுமா? பெரும்பாலும் பெண்கள் தான்.

இதை பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. விலை எவ்ளோதான் கம்மியா இருந்தாலும், இது ஒத்து கொள்ள முடியாத விஷயமாக எனக்கு தோன்றியது. அவரவர் தெருவில் ஒரு அண்ணாச்சி கடையோ காய்கறி விக்கிற கிழவியோ இல்லையா? அவர்களை எல்லாம் தவிர்த்து இங்கு வந்து வாங்கி எத்தனை ஆயிரம் மிச்சம் பிடிக்கும் எண்ணமோ? மக்களின் இந்த மனப் போக்கு சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என நினைக்கிறேன்.
இது போன்ற சிறு விஷயங்கள் தொடங்கி பல சீரியசான விஷயங்களில், தமிழ் சமூகம் மிகப்பெரிய ஆட்டு மந்தை கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது...

நீங்க எதுக்கு அய்யா சரவணா ஸ்டோர்ஸ் போனீங்கன்னு கேக்குறீங்களா? எனக்கு பிடிச்ச 'perfume' வேற எங்கேயும் கிடைக்கிறதில்ல... அதனால தான் அங்க போக நேர்ந்தது. மத்தபடி இது போன்று திருவிழா கூட்டத்துக்கு நடுவில் 'purchase' செய்வதென்பது அலர்ஜியான விஷயமாக தோன்றி வருகிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

நிகழ்வுகளின் முடிச்சுகள்
கண் சிமிட்டலுடன் கூடிய
உன் சம்மதப் புன்னகைக்காக
நான் காத்திருக்கும் கணங்களில்...

மழையின் முதல் துளி வேண்டி
மேகம்
பார்த்து முற்றத்தில்
நின்றிருக்கிறாள்
ஒரு சிறுமி.
தனக்கான சொற்கள் தேடி
முற்றுப்பெறா கவிதையொன்று,
பெருவெளியில் அலைகிறது.
ஓடுடைத்து வெளி வர எத்தனிக்கிறது
வெளிர் நீலப் பறவைக் குஞ்சு.

நிகழ்வுகளின் முடிச்சுகள் மேலும் இறுக,
இவற்றின் விதி ரகசியம்
அறிந்த
காலம்
ஒரு நதியாக சலனமற்று
ஓடிக்
கொண்டிருக்கிறது...
உன் நெற்றிச் சுருக்கத்தில் !


பின் குறிப்பு:
இந்த கவிதையையும்(கவிதைன்னு சொல்லலாமா ?!?!), இதுக்கு முன்னாடி சொன்ன விஷயத்தையும் சேர்த்து தாங்கள் செய்யும் கற்பனைகளுக்கும் யூகங்களுக்கும் கம்பெனி நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது :)

கவிதைகள் ஜாக்கிரதை

நண்பனொருவன்:
"டேய்... ஏதோ கவிதை போட்டுருக்கேன்னு சொன்ன. ஆனா அந்த லிங்க்ல போயி பார்த்தா கதை மாதிரி எழுதி கடைசில ஆச்சர்யக்குறி வெச்சிருக்கிற?... ஓ... அதுதான் கவிதையா... ஏதோ சுமாரா இருக்குடா"

சங்கத்து ஆள் ஒருத்தன்:
"என்ன பாஸு.... எப்பவுமே ஒரே பீலிங்கா சோகமா எழுதிட்டு இருக்குற. உனக்கு கவிதைய விட அந்த இண்ட்ரோ குடுக்குற மொக்கைதான் நல்லா வருது பாஸு."

தோழியொருத்தி
:
"ஹே சிவா... வழக்கம் போல இந்த கவிதைக்கும் ஃபோட்டோ செம சூப்பர்!"
(இது பாராட்டு கிடையாது. உள்குத்து என்னனா... கவிதைங்கற ஒரு விஷயம் அங்க இல்லாத மாதிரி ஒரு பல்பு குடுக்கிறாங்க )

இதெல்லாம் நம்ம வலைபக்கத்து கவிதையை பார்த்துட்டு கோடானு கோடி(?!) ரசிகப் பெருமக்கள் கிட்ட இருந்து வர்ற ரெஸ்பான்ஸ்ல ஒரு சின்ன சாம்பிள்! ஆனா இதுக்காக நம்ம இலக்கிய சேவையை நிறுத்த முடியுமா?? அதனால.... "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் வேதாளத்தை நெருங்கி..." அப்படின்னு அம்புலிமாமா கதை மாதிரி, நானும் ஒரு வைராக்கியத்தோட நல்ல கவிதை எழுதியே தீருவேன்னு புயலென புறப்பட்டு..............................

என்னங்க இது??
நான்தான் கொசுவர்த்தியை சுத்த விட்டு ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்கை ஓட்டுறேன்... நீங்களும் 'உம்' கொட்டி வாசிச்சிட்டு இருக்குறீங்க. ஹையோ... ஹையோ !!!

உண்மையான காரணம் வேற ஒண்ணும் இல்ல...

இனிமேல் கொஞ்ச நாள் தனிமை, பிரிவுன்னு எழுதி இளையராஜா ட்ரூப் வயலின் மாதிரி பேக்ரவுண்ட்ல சோக கீதம் பாட வேண்டாம்னு நினைச்சேன். சில வலைபக்கங்களில் பார்த்தால் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை எழுதுறாய்ங்க. இவிய்ங்களை (ஸ்ரீமதி, ஒற்றை அன்றில்) பார்த்து இம்ப்ரெஸ் ஆகி இது மாதிரி நாமளும் ஒரு தடவை ரொமான்டிக் லுக்கு விடலாம்னு தோணுச்சு.

அலவலகத்தில் நிறைய ஆணி புடுங்குற வேலை இருந்தாலும், இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரணத்தோட எழுத ஆரம்பிச்சு, வந்து விழுந்த கவிதைகள் கீழே... படிச்சு பார்த்து ஏதாவது தேறுதான்னு சொல்லுங்க.

இனி.... கவிதைகள் ஜாக்கிரதை! ;)

--------------------------------------------------------------------------------------------------------------

அடிவான நட்சத்திரப் புள்ளிகளிணைத்து
எழுத்துக்களாக்கி உன் செல்லப் பெயர்கள்
ஒவ்வொன்றாய்ச் செய்வதுதான்,
இரவு நேர நீள் பயணங்களில்
எனக்கு னிச்சையாய்ப் போன வழக்கம்!
==========================



நீ விழிகள் விரியச் சினங்கொள்ளும் வேளையிலும்,
எனது செயல்கள் கலைத்து நிறுத்தி விட்டு
உதடு சுழித்துச் சிரிக்கையிலும்,
உன்னை இறுகக் கட்டி முத்தமிடும்
எண்ணம் துளிர்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை!
==========================

அலைபாயும் கூந்தலில் விரல்கள் செருகி
இடம் வலமென இரு சிறு கற்றைக் குழல்களெடுத்து
நடுவே பிணைத்துக் கடிவாளமிட்ட உன்
நளினம் கண்ட பொழுதில்,
தறிகெட்டு ஓடத் துவங்குகிறது என் மனம்.

==========================




என் அநேக வேண்டுதல்களை, நீ
மறுத்துப் புறந்தள்ளிச் சென்றாலும்,
உன்னை கோபிக்கத் தெரியாமல்
உன் விழியோர கர்வம் நினைத்து
ரசித்துச் சிரித்துக் கொள்கிறேன்... தனிமையில்.

==========================

நளினமான நடையுடன் சில கணங்களில்
அந்தச் சாலை வளைவைக் கடந்து சென்று விட்டாய்.
இன்னும் உனதழகான வளைவுகளில் சிக்கி
மீள வழியின்றி தவிக்கிறது என் மனம்!!




மாநகரைத் துயிலெழுப்புபவள்




அம்மாவின் விரல் பிடிக்காமல்
அதிகாலைப் பேருந்தின் சற்றே உயரமான படிகளில்
சிறிய மெனக்கெடலுடன் ஏறி
பற்றுதலுக்கான கம்பி நோக்கி விரைவதற்குள்
முன்னகர்ந்த பேருந்தினுள்
தள்ளாடிச் சரியும் சிறுமியின்
இடது முழங்கைச் சிராய்ப்புகளில்
பிறக்கும் பெருங்குரலெடுத்த அழுகையில்
நிசப்தம் உடைந்து துயிலெழுகிறது இம்மாநகரம்!

உனது பிரிவின் பயனாய் மூன்று கவிதைகள்




1.
ஒவ்வொரு அலைவரிசையிலும் ஒத்திசைந்து
அடுத்தடுத்த பண்பலை வானொலியிலும் நின்று
எத்தனை மெல்லிசை கேட்டாலும்
தவிர்க்க முடிவதில்லை
உன் தொலைபேசி அழைப்புகளற்ற
இரவின் மீது கவியும் வெறுமையை!!!


-------------------------------------------------
2.
திகைப்பூட்டும் வேலைப்பளு,
ஏமாற்றம்,
சிறு புன்னகை,
கோபம்,
ஆயாசம்
பயணக் களைப்பு
மற்றும் இன்ன பிறவும் சேர்ந்து -
என விதிக்கப்பட்ட
சராசரி அலுவல் நாளிலும்
என் செயல்கள் நிறுத்தி
புலன்கள் நிறைத்து
மனதின் அடியாழம் கீறி
ரத்தச் சிவப்பு நிறத்தில் குரூரமாய்ப் புன்னகைக்கின்றன...
சென்ற இளவேனிற் காலத்தே நிகழ்ந்த நம் பிரிவும்,
அதற்கு முந்தைய உன் நினைவுகளும்!

-----------------------
3.
உன் நினைவுகளின் நதி
எனது கரைகளை உடைக்குமென
அனுமானிக்கவில்லை.

பார்த்து,கேட்டு மற்றும் உய்த்துணரும்
ஒவ்வொரு அன்றாட நிகழ்விலும்
கண்ணிற்குப் புலப்படா ஒரு தூரிகையால்
உனது தனித்த வர்ணத்தை தீட்டிச் செல்கிறாய்.

உன் நினைவுகளின் நிழல் படரா அன்றாடம்
என்பது முற்றிலும் சாத்தியமில்லை போலும்.

வீசும் காற்று,
தடுப்பில் மோதி எதிர்த்திசை திரும்பும் காற்றுடன்
மூர்க்கமாய்க் கலந்து சுழலுகையில்
நடுவே சிக்கித் தவித்துத்
திசையற்றுச் சுற்றியலையும்
துண்டுக் காகிதமாய் என் மனம்... இப்பொழுதில்.

===========================================================================

பின்னுரை:

மூன்று தனித் தனிக் கவிதைகளாக இருந்தாலும், அதை மனதில் நினைக்காமல் படித்த பொழுது மூன்றும் சேர்ந்து ஒரே கவிதையாகவும் எனக்கு தோன்றியது. உங்களுக்கு எப்படி??? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

"இதெல்லாம் சரி... ஏன் ஒரே மாதிரி பிரிவு, தனிமை, நினைவு அப்படினு ஒரே பரோட்டவை இவ்வளோ காலமா திருப்பி திருப்பி போடுற?"ன்னு கேக்குறீங்களா?
அது என்னமோ தெரியலைங்க... சின்ன வயசுல இருந்து "பிரிவு" அப்படிங்கறது நம்மளை ரொம்ப பாதிச்ச விஷயமாவே இருந்துட்டு வருது...
ரெண்டாம் வகுப்பு படிக்குறப்போ நான் வளர்த்த கோழி குஞ்சை காக்கா தூக்கிட்டு போன சம்பவத்துல துவங்கி, போன மாசம் திடீர்னு குடும்பத்தோட வீட்டை காலி பண்ணிட்டு போன பக்கத்து பிளாட் மாமாவோட பொண்ணு வரைக்கும் நம்ம உணர்வுகளோட விளையாடுற மாதிரி ஏதாவது பிரிவு அப்பப்போ நடந்துட்டே இருக்கு.

அதனால நானே கட்டுபடுத்தணும்னு நினைச்சாலும் தானா இந்த டாபிக் பக்கமா மனசு ஒடுது. நம்ம வலைப்பக்கமும் சோக மயமாய் பிரிவும் பிரிவு சார்ந்த பாலைத் திணை மாதிரி காட்சியளிக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வேற மாதிரி எழுதலாமான்னு(அதாவது... கவிதைங்ற பேர்ல வேற ஏதாவது விஷயத்தைப் பத்தி) யோசிச்சிட்டு இருக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கும்னு?

ஒரு நிமிஷம் பாஸு... இன்னும் ஏன் அந்த பக்கத்து வீட்டு மாமா பொண்ணை நினைச்சிட்டு இருக்றீங்க? நானே மறந்துட்டேன்... உங்களுக்கு என்ன பீலிங் வேண்டி இருக்கு? :)
அது சும்மா ஒரு 'Comedy Element'க்காக சேர்த்தது(ஆனா கோழிக்குஞ்சு மேட்டர் உண்மை)... அதுக்கும் இந்த கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.... இது வேற பீலிங் பாஸு.!

அழுக்கு ஜீன்சும், சென்னை புத்தகக் கண்காட்சியும்

கடமை தவறாத என் அறைத் தோழர்கள் இருவரும் நேற்று (ஜன-17, சனி) அலுவலகம் சென்று விட்டதால், புத்தகக் கண்காட்சிக்கு 'தனியாய் சென்று அல்லல்படுவாயாக' என சபிக்கப்பட்டேன்.
சென்ற வாரம்(சனி/ஞாயிறு) செல்ல முடியாத அளவுக்கு ஐ யாம் வெரி பிசி. இந்த வாரம் நண்பர்களை கூப்பிட்டால் என்னை விட "பிசி எபக்ட்" குடுத்து அலுவலகம் சென்று விட்டார்கள்(அவிய்ங்க ஏற்கனவே போயிட்டு வந்துட்டாய்ங்க... அதான் முக்கிய காரணம்).

அதிகாலை 11.00 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து விட்டு, சனி நீராடி, உடை உடுத்தி, 'சரவணா' வில் உண்டு முடித்து, இரண்டு பேருந்துகள் மாறி, சிக்னல் மதிக்காமல் சாலை கடந்து பு.க வளாகத்தை அடைய மணி 2.30 .






இந்த வருடம் பெரிதாய் குறைபட்டுக்கொள்ள ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல ஏற்பாடு. தாகத்திற்கு தண்ணீர், சந்தேகம் தீர்க்க 'enquiery counter' மற்றும் ஸ்டால் எண்களுடன் வளாக வரைபடம் , அவ்வப்போது ஒலிபெருக்கி அறிவிப்புகள், உலக சினிமா காட்ட ஒரு திரை என பு.கா ஒவ்வொரு வருடமும் மெருகேறுகிறது.

உள் நுழைந்ததும் வலது கோடியிலுள்ள 'கீழைக் காற்று' ஸ்டாலில் துவங்கினேன். பின் சமையல், கோல, ஆன்மிக, சுய முன்னேற்ற, ஆங்கில புத்தகங்கள் விற்கும் கடைகளைக் கவனமாய்த் தவிர்த்து பிடித்த ஸ்டால்கள் ஒவ்வொன்றாய் அலசினேன்.
ஆழி, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, தமிழினி மற்றும் இன்ன பிற என சுற்றித் திரிந்தேன்.

காலச்சுவடு - மிக அருமையான அரங்க அமைப்பு. நல்ல நூல்களும் கூட...

தமிழினி - எழுத்தாளர்களின் கம்பீரமான பெரிய படங்களை தொங்க விட்டு, நல்ல நல்ல புத்தகங்கள் வைத்திருந்தார்கள். தினத்தந்தி சினிமா செய்திகளை பரம்பரை பரம்பரையாய் படிப்பவர்களும், மானாட மயிலாடுவதை குடும்பத்துடன் கண்டு களிக்கும் மேன்மக்களும், நமீதாவுக்கு கோயில் கட்டும் முரட்டு பக்தர்களும் நிறைந்த தமிழ் கூறும் நல்லுலகின் ரசனை, இப்படி எழுத்தாளர்களை விளம்பரம் செய்து வாசகர்கள் கவரப்படும் அளவிற்கு மாறி விட்டதோ என ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. (இந்த ஸ்டாலில் இருந்த எழுத்தாளர் நாஞ்சில்நாடனிடம் ஒரு புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கிட்டோம்ல...)

உயிர்மை - மொத்தம் நான்கைந்து பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களே 85% ஆக்கிரமித்திருந்தன. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ரசிகர்கள் தன்னை 'உயிர்மை'யில் சந்திக்கலாம் என வலை மனையில் கூறியிருந்தார். அங்கு சென்று உயிர்மை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டால் 'சொல்லியிருந்தார்...வரணும்.. இன்னும் ஆளை காணோம்' என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

கிழக்கு - பிடித்த பதிப்பகம். நல்ல கூட்டம். உங்கள் செல்பேசி எண்ணை எழுதி அங்கேயுள்ள பெட்டியில் போட்டால் புது புத்தகம் வெளியிட்டால் குறுஞ்செய்தி அனுப்புவதாக சொன்னார்கள். காசா... பணமா.... என் எண்ணை எழுதி கடாசியாகி விட்டது. சென்ற வருடம் இங்கு சந்தித்த எழுத்தளர் பா.ராகவன் சிறிய விபத்தில் சிக்கி இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பதாகத் தன் வலை மனையில் கூறியிருந்தார். விரைவில் நலம் பெறுவார் என வேண்டி கொள்வோம்.

ஆனந்த விகடன் - செம கூட்டம். பட்டய கிளப்புறாய்ங்க...

ரேடியோ மிர்ச்சி ஸ்டாலில் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பரிசு என்றார்கள். கிரிக்கெட் பிட்ச் இரு கோடியிலும் இருக்கும் ஸ்டம்ப்களுக்கிடையேயான தூரம் என்ன என்ற முதல் கேள்விக்கு '26' மீட்டர் என சரியாக ஒரு கேவலமான பதிலை சொல்லி 'பல்ப்' வாங்கினேன்.

மிக சிறியது, சிறியது மற்றும் பெரியதுமாக சுமார் 25+ புத்தகங்கள் வாங்கியாகி விட்டன. மாலையில் அலுவலகம் முடித்து என்னை சந்திக்க பு.க வந்த அறைத்தோழன் ராஜாவின் வன்மையான கண்டனத்திற்குட்பட்டு, "கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ" என நானே திகிலாகி, மீண்டும் ஒரு முறை தமிழினி-க்குச் சென்று அ.முத்துலிங்கத்தின் கட்டுரை தொகுப்பு ஒன்றுடன் எனது அலப்பறையை 8 மணிக்கு முடித்து கொண்டு வீடு திரும்பினோம்.

திரும்பும் போது தான் யோசித்தேன், முழுமையாய் 5 மணி நேரம் சுற்றியும் எந்த ஒரு தொந்தரவும் என் கவனத்தை கலைக்கவில்லை( ஒலி பெருக்கி சத்தம், பசி... அட இவ்வளவு ஏங்க... எங்கெங்கு காணினும் நிறைந்து இருந்த பெண்கள் உட்பட). கர்ம சிரத்தையாய் ஒரு காரியம் முடித்ததாய் ஒரு நிறைவு.
"நீ அம்புட்டு நல்லவனாடா" -ன்னு நீங்க கொலை வெறில கேக்குறது என் காதில விழுகுது... நான் அந்த அளவுக்கு நல்லவன் இல்லேனாலும்... வடிவேலு சொல்றது மாதிரி "லைட்ட்ட்ட்ட்டா...!!!" :)

பின் குறிப்பு:
தலைப்புல இருக்கிற "அழுக்கு ஜீன்ஸ்" உள்ள வரலையேன்னு யோசிக்கிறீங்களா??? அது சும்மா ஒரு மொக்கை பில்ட்-அப்பு... ப்ரீயா விடுங்க!!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட