இச்சைப் பெருங்கடல்



பூனைக்குட்டியைப் புரிந்து கொள்ளுதல்
=======================================

யூகிக்க இயலா உடல்மொழியுடன்
தனித்துத் திரியும் பூனைக்குட்டியின் உலகம்
புரியா புதிர்ப் பிம்பங்கள் நிறைந்தது.
மிகு விருப்பப் பொழுதுகளிலோ
உற்ற துணையின் உடனிருப்பிலோ
அவிழ் மொக்கையொத்த சிறு
செவ்வாய் சிரித்து நீர் சுரக்கலாம்.
இவை தவிர எக்கணத்திலும்,
வலி வெறுப்பு களைப்பு என
எவ்வுணர்வுகளின் நிறச் சாயல்களையும்
தன் மேல் படிய விடுவதில்லை.
கரு நிறச் சிறு மென் மயிர்கள் தடவி
சொற்கள் உதிர்க்கா செந்நிற உதடுகளை
வாஞ்சையுடன் நாவால் வருடி
அழுந்த முத்தமிட்டு, அதன் முன்
ஒரு குழந்தையாகிக் குழைந்தால்
உங்கள் நடுவிரல் கவ்விப் பிடித்து
அந்தரங்கப் புதிர்கள் அவிழும்
உணர்வு முடிச்சுகளின் தடம் காட்டிச் சிரிக்கும்.
பூனைக் குட்டியைப் புரிந்து நெருங்கும்
அத்தோழமை கணத்தில் நிகழலாம்
கோடியின்பம் கொண்ட உலகிற்கான
ஒற்றைக் கதவின் திறப்பு.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



இச்சைப் பெருங்கடல்

======================



துணையின்றி நகராத் தோணி செய்து
இச்சைப் பெருங்கடலைக் கடக்கக்
கரையில் காத்திருந்தேன் துடுப்புகளுடன்.
வெகு காலம் சென்ற பின்பு
வசீகர அந்தி மாலையொன்றில்
உயிர் கொல் வளைவுகளுடனும்
மோகமொளிரும் கண்களுடனும்
வந்தவளிடம் சொன்னேன்
நெடிய காத்திருப்பின் வலியை.
என் முகமேந்தி அவள் முத்தமிட்டதும்
நகரத் தொடங்கியது தோணி.
அதி மிருதுவான கழுத்தில்
மென் முத்தங்களிட்டுக் கீழிறங்கி
இளமஞ்சள் நிற இணை முகில்களைக்
கைகளிலேந்தி ஒன்றைக் கவ்வியிழுத்துச்
சுவைக்கும் பொழுது கடலின் நடுவே
சூல் கொண்டதொரு புயல்.
பெரும் அலைகளின் ஓசை லயத்துடன்
ஒத்திசைவாய் முயங்கி
புயலின் நடுவே புணர்ந்து களைத்துறங்கி
மறு கரையில் துயிலெழ
இணைந்தவள் எங்கோ மறைந்ததுணர்ந்தேன்.
அவள் சென்ற திசையில்
பதிந்த காலடித் தடங்களில்
தேங்கியிருக்கின்றன நான் கடப்பதற்கு
இன்னும் நூறு கடல்கள்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



வெண்புறாவின் இறகொன்று
===========================
இறுகத் தழுவி இதழ்கள் கவ்வி
கலவிக் களைத்து காமம் கரைந்தோடிய
மோகப் பொழுதுகள் கழிந்ததும்
முகம் மறைத்த முடி கோதிக்
காது மடலுக்குப் பின் சேர்த்து
நெற்றியிலிடும் ஈர முத்தத்தில்
என் தூயன்பில் தோய்த்த
வெண் புறாவின் இறகொன்று
மிதப்பதாய்ச் சொல்லி மகிழ்கின்றாய்.
நளினமாய் மிதந்திறங்கும்
அன்புச் சிறகைக் கவ்விப் பிடித்து
மோகத்துடன் மீண்டும் உன் மேல்
பாய்ந்து முயங்கக் காத்திருக்கிறது
தீ நாவுகளைப் போலசையும்
பிடரி மயிர் கொண்ட என்றும் அயரா
காமம் எனும் நீலக்கண் புரவி.



.

தனுசு ராசி நேயர்களே...

சமீபத்தில் பார்த்து சிரித்து ரசித்த இரண்டு குறும்படங்கள் 'ஜக்கு பாய்ஸ்' & 'காதலில் சொதப்புவது எப்படி'. குறும்பட இலக்கணங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பார்த்து சிரிக்கலாம்.
காதலில் சொதப்புவது எப்படி படம் கலைஞர் டிவி - நாளைய இயக்குனர் நிகழ்ச்ச்சியில் வந்தது என யூகிக்கிறேன். பார்ப்பதற்கு சுவாரசியமான பல உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன.
ஜக்கு பாய்ஸ் படம் நண்பர்களின் மின்னஞ்சல் வழியே அறியக் கிடைத்தது. நம்ம பொட்டி தட்டும் மென் பொருள் துறை மக்களை பற்றியது. இதில் இதில் "வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்சாய்ங்களாம்" என்றொரு வசனம் சிந்தனைக் குதிரையை தட்டி எழுப்பி அறுபது கி.மீ வேகத்தில் தலை தெறிக்க ஓட வைக்கிறது. பல பரிமாணங்களைக் கொண்ட, பல அர்த்தங்களை பொதிந்து வைத்திருக்கும் வசனம். :-)


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


வாங்கி பல காலமாக தொடவே இல்லையே என நினைத்து, அந்த புது பேண்ட் & சட்டையை எடுத்து போட்டு, மூன்று நாள் தாடியை சவரம் செய்து மிடுக்காக அலுவலகம் கிளம்பினேன் நான்கு நாட்களுக்கு முன். ரயில் நிலையம் செல்லும் வழியில் சில பெண்கள் நம்மை பார்த்ததாக நினைத்துக் கொண்டு மென் சிரிப்புடன் தாம்பரம் ரயில் ஏறினேன். பெண்கள் என்னை பார்த்தார்களோ இல்லையோ, தாம்பரத்தில் ரயில் முழுவதும் நிற்பதற்கு முன்பாகவே அவசரமாக நான் இறங்கியதை பார்த்த ஒரு ரயில்வே போலீஸ் ஒருவர், பிடித்து ஸ்டேஷனுக்குள் உட்கார வைத்து விட்டார். நான் ஏதாவது பேசி சம்மாளிக்க முயன்று தோற்று விட, என்னை போன்றே சிக்கிய இன்னொருவர் போலீசுடன் வாக்கு வாதத்தில் இறங்கினார். அரை மணி நேரம் இருக்க சொல்லி, அபராதம் வாங்கி அனுப்பி விடுவார்கள் என நினைத்து ஆனந்தமாக ஸ்டேஷனில் உள்ள டிவியில், இசையருவி சேனலின் பாடல்களை ரசித்து கொண்டிருந்தேன். அவ்வப்போது, மொக்கையான காக்கி சட்டையிலும் அழகாய் தெரிந்த ஒரு பெண் போலீஸ், தாவணியில் எப்படி இருப்பார் என கற்பனை சிறகடித்தது.

இதே போல் அடுத்த மின்சார ரயிலில் சாகசமாய் இறங்கி சிக்கிய நான்கு பேர் அழைத்து வரப்பட்டனர். அதிலிருக்கும் ஒருவரிடம் பேசும் போது, "மூணாவது தடவை சிக்குறேன் பாஸ்... இன்னிக்கு முழுதும் விட மாட்டய்ங்க. நாலு மணிக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயி அபராதம் கட்ட வெச்சு இழுதடிச்சுருவாய்ங்க" என அவர் சிரித்து கொண்டே சொல்ல எனக்கு டரியல் ஆனது. ஏதாவது தமிழ் சேனலில் "தனுசு ராசி நேயர்களே...இன்று புது சட்டை போட்டு போலீஸ் ஸ்டேஷனில் குத்த வெச்சு உட்காரும் யோகம் உங்களுக்கு" என ஜோதிட திலகம் யாரவது கணித்து சொல்லியிருப்பாரோ என எனக்குள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது.

அரசு எந்திரங்களில் அல்லது வெளி இடங்களில் எதாவது காரியம் ஆக வேண்டுமானால், யாரவது நண்பர்கள்/உறவினர் தொடர்பை பிடித்து சாதித்து கொள்ளும் சாதாரண மிடில் கிளாஸ் ஆசாமி போல் செயல் பட ஆரம்பித்தேன். சில வருடங்களுக்கு முன் 'ரயில்வே' பொறியாளர் வேலையை உதறி, தற்போது தமிழக அரசு துறையொன்றில் பணி புரியும் பள்ளித்தோழனை அலைபேசியில் அழைத்து நிலைமையைக் கூற, அவன் தனது பழைய ரயில்வே நண்பனொருவனின் உதவியுடன் சட்டத்தை வளைக்க காய் நகர்த்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் சுமூகமாய் முடிய, இசையருவி சேனலில், "நேர்மைதான் வெற்றியின் ரகசியமே " என்ற பாய்ஸ் பட பாடலின் ஒரு வரி உச்சஸ்தாயில் ஒலிக்க, வெளியே வந்து வறுத்த கடலை வாங்கி சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினேன். உடனிருந்த, சாகம் செய்த சாமானியர்களில் பத்தில் ஏழு பேர் நீதிமன்றம் சென்று அபராதம் கட்டியிருப்பார்கள்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



வினோதமான நரம்பிசைக் கருவி

ஏழு நரம்புகள் இழுத்துக் கட்டப்பட்டு
அடர் நீல நிறம் கொண்ட
வினோதமான நரம்பிசைக் கருவியொன்றை
பரிசளித்து விட்டு புதிர்ச் சிரிப்புடன்
விடைபெற்றுச் சென்றாள்.
ஒரு தீராத் தனிமைப் பொழுதில்
மீட்டத் துவங்கினேன் அக்கருவியை.
துரோகம், காமம், குரோதம்,
குரூரம், காதல் என வித விதமான
என் ஆழ் மன எண்ணங்களை அகழ்ந்தெடுத்து
வார்த்தைகளாய் மொழி பெயர்த்து
அவ்விசைக்கருவி உரக்கப் பேசத் துவங்கியதும்,
திகைப்புடன் நிறுத்தி விட்டேன் மீட்டுதலை.
இன்னும் மிச்சமிருக்கும் அதன் மீயொலி அதிர்வுகள்
எனதறையை நிறைக்க
நான் எனும் சுயம்
உள்ளிருந்து மீண்டெழுந்து
என் உடலைப் பார்த்துப்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறது சில காலமாய்!

மழை சூழ் காலை வேளைகள்

தமிழ் திரையிசை பாடல்கள் தவிர Bryan Adams, Bon Jovi, Enrique என தலைக்கு நாலு பாட்டு தெரிஞ்சு வெச்சுகிட்டு 'நாங்களும் இங்கிலீஷ் மீஜிக் கேப்போம்ல அப்படின்னு அலப்பறைய குடுத்துட்டு இருந்தேன். புதுசா வேலைக்கு சேர்ந்து நம்ம கோஷ்டில ஐக்கியமான நிஜமாவே இங்கிலீஷ் மீஜிக் கேக்குற ஒரு சகா, The Corrs எனும் இந்த ட்ரூப்பின் Toss the feathers யூடியூப் லிங்க் அனுப்பினான். நீங்களும் கேட்டு பாருங்க... அழகிய பெண்கள்...அற்புத இசை.



இந்த மாதிரி ஒரு இசை நிகழ்வில் அன்பின் தோழி யாராவது உடனிருக்க, மிதமான மது போதையில் நடனமாடிக் கொண்டே இசையுடன் ஒன்ற வேண்டுமென்பதுதான் என் நெடு நாளைய கனவு. ம்ம்ம்...!!!!




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



கவிஞர் அம்சப்ரியா நடத்தும் 'புன்னகை' இலக்கிய சிற்றிதழின் அறுபதாவது பதிப்பு, இணையத்தில் இயங்கும் அறுபது கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாய் வெளிவந்தது. அதில் என்னுடைய கவிதையும் ஒன்று மாநகரைத் துயிலெழுப்புபவள் . புத்தகத்தை வாங்கி அச்சில் நம் எழுத்தை பார்க்கும்போது சிறப்பானதொரு உணர்வு. மிக சிறந்த கவிதை படைப்புகளினூடே நம்முடையதும் இருக்கிறதென்பது என்னளவில் மிகப் பெரிய அங்கீகாரம்.





அதோடு தோழர் மாதவராஜ், புதிதாய் வலையில் எழுதுபவர்களை அறிமுகம் செய்யும் 'புதிய பதிவர்கள் அறிமுகம்' எனும் பகுதியில் என்னுடைய இந்த வலைப்பூவையும் அறிமுகம் செய்துள்ளார்.
சக கவிஞர்கள்/பதிவர்களுக்கு வாழ்த்துகள். தோழர் மாதவராஜ், கவிஞர் அம்சப்ரியா இருவருக்கும் நன்றிகள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


முதலில் ட்விட்டரை பற்றி கேள்விப்படும்போது 'அப்படி இதுல என்ன இருக்குன்னு பைத்தியமா திரியுறாய்ங்க'-ன்னு தோன்றியது. இப்போது அந்த பைத்தியங்களில் நானும் ஒருவன். எதையாவது பளிச்னு சொல்லி மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளத் துடிக்கும் மனிதனின் உள்ளுணர்வை ட்விட்டர் எனும் சிட்டுக்குருவி அற்புதமாய் exploit செய்கிறது. இதுவரை நான் ட்விட்டிய சில சிந்தனைகள்(?)/தத்துவங்கள்(?)/மொக்கைகள்(!) கீழே. படித்து விட்டு கோபம் வந்தால் டிவிட்டரில் என்னை பின்தொடரவும். எல்லை மீறிய கோபம்/ விரக்தி ஏற்பட்டால் மேலே உள்ள வீடியோவை மீண்டுமொரு முறை பார்த்து ஆன்மாவை சுகப்படுத்துவீராக. ஆமென்!

## இந்த பக்தகோடிகள் தொல்லை தாங்க முடியலப்பா... மார்கழி மாசம் குழாய் ஸ்பீக்கரை கட்டி 'Hi-Decibel' ல பாட்டு போட்டாதான் அம்மனோ/அய்யப்பனோ வந்து அருள்புரிவாங்களா? காலைல 5 மணிக்கே ஆரம்பிச்சிர்ராய்ங்க.நல்லா தூங்கி 4 நாள் ஆச்சு..இவிய்ங்க பக்தியில மண்ணுலாரிய விட்டு தான் ஏத்தனும்!

## Watched 'Scent of a Woman'.Al Pacino rocks.1 of his dialogs is.."Women! Wat can u say?Who made 'em?God must hv been a fuckin' genius!"

## "ரஹ்மான் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" A.R.R strikes again with double Grammy awards. நீ கலக்கு தலைவா!!!

## IPL - CSK Vs MI : ஏதோ உள்குத்து இருக்கோ? ஊதா சட்டைக்காரய்ங்க வேணுமினே மஞ்ச சட்டைக்காரய்ங்களுக்கு விட்டுகுடுத்த மாதிரி இருந்தது.

## India in T20 worldcup: "W.Indies... Send India back to home in their undies" என கமெண்ட் எழுதிய அட்டையை உயர்த்தி பிடித்திருந்தார் ஒரு மே.இ தீவு அணியின் ரசிகர்.
அவர் எதிர்பார்த்தது போன்றே மே.இ தீவு இந்தியாவின் டவுசரை கழட்டியது.
நேற்று மிச்சமிருந்த ஒட்டு துணியையும் உருவி விட்டது இலங்கை அணி. இவிய்ங்க (IND) விளையாடுற அழகைப் பார்த்து BP ஏறினதுதான் மிச்சம். :-(

## சகா ஒருவனிடம் என் அறிவுரை: "சமுதாயம் ஒரு சரக்கடிச்ச குரங்கு மாதிரி... அதைப் பத்தி கவலைபடாத". சொல்லி முடித்ததும் அடிக்க துரத்துகிறான். :-(

## இன்றொரு இண்டர்வியு.எடுத்தது அழகிய பெண்.அவளின் அதிநுட்பமான கேள்விகளுக்கெல்லாம் சரியாய் பதிலளித்தும் புன்னகைக்கவேயில்லை. VC++ =சாத்தான் மொழி
இனி வரும் சுற்றுகளை சமாளித்து தேறி எப்படியாவது அங்கு வேலையில் சேர வேண்டும், சிரிக்கும் போது அவள் எப்படி இருக்கிறாள் என பார்ப்பதற்கு. ;-)

## வெகுநாட்களுக்கு பின் சமைத்து,வீட்டின் கூரையேறி நிலாச்சோறு உண்டோம். அறைத்தோழன் ராஜாவின் புது மின் குக்கர் புண்ணியத்தில்.என்ன தவம் செய்தனை.

## கொடியிடை பெண்ணுக்கு கொங்கைகள் வளமாய் இருப்பது + அவள் உங்களை பார்த்து சிரிப்பது = மேஜிகல் ரியலிசம்.

சில நாட்களாய் மேக மூட்டத்துடன் விடியும் சென்னை நகரத்துக் காலையொன்றில் ட்விட்டிய 'பீலிங்கு' கவிதை


ஒன்றாய் தேநீர் அருந்த

கழுத்தோர வாசம் நுகர்ந்து முத்தமிட

காதல் மொழி பேசி உருக

யாரையாவது காதலித்துத்

தொலைந்திருக்கலாமெனத் தோன்றுகிறது,

ரம்மியமான மழை சூழ் காலை வேளைகளில்.

காமம் வழிந்தோடும் பனிக் காலம்






1.

நேற்றைய கனவில் உனைப் புணர்ந்து
களித்ததை கவிதையாயெழுத முடிவெடுத்தேன்.
மெல்லிய அணைப்பில் பகிர்ந்த
வெம்மையான முத்தங்களோடு துவங்குகிறது கவிதை.
உன் வனப்பு மிகு கொங்கைகளையும்,
ஆழ்ந்த முயக்கப் பொழுதுகளில் உன் முனகலையும்
பற்றி சில வரிகள் சேர்த்தாயிற்று.
கவிதை முழுமையுறும் வேளையில்,
எனதறையில் உன் வாசம் பரவ
கவிதைக்குப் பின்னாலிருந்து உன் விசும்பல் சத்தம்.
வார்த்தைகளைக் கலைத்து விட்டு
உனைத் தேடி கவிதைக்குள்ளிறங்கும் என்னைத்
தீராக் காமத்துடன் கட்டிக் கொள்கிறாய்.
முத்தங்களோடு தொடங்கும் மற்றுமொரு
கூடலின் வெப்பத்தில் எரிந்தழிகிறது
நிகழையும் கனவையும் பிரிக்கும் சுவர்.
காத்திருக்கிறது கவிதை.. அதன் முடிவிற்காக.


===========================


2.

நீ வராத நாட்களின் தவிப்புகளும்
உனைக் கண்டதும் பரவும் மகிழ்ச்சியும் சேர்ந்து
உன் மீதான ஈர்ப்பிற்கு
காதலெனப் பெயரிட்டுச் சிலிர்த்துக் கொண்டன.

பின்பொரு பனிக்கால மாலையில்
பெண்மை ததும்பும் நடையால் அசையும்
உன் பிருஷ்டத்தின் சிறு மென் அதிர்வுகளில்
காதல் எனும் பெயர் தடமழிந்து மறைய,
மெலிதாய்ப் புன்னகைக்கிறது
சாஸ்வதமாய் உள்ளுறைந்திருக்கும் காமம்.


===========================


3.

உடலதிர முயங்கிக் களைத்த
முதல் புணர்தலுக்கு பின்னர்,
தளும்பும் உன்னிரு முலைகளுக்கு நடுவே
வழிந்திறங்கும் வியர்வைத் துளியொன்றில்
கரைந்தோடுகிறது,
பதின்ம வயது முதல் சேர்த்து வைத்த
என் காமமும் வேட்கையும்.

அங்காடித் தெரு - விளிம்பு நிலை மனிதர்களின் கதை

என்றாவது தி.நகர் அடுக்கு மாடி ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும் வேட்கையின் நடுவே நெல்லைத் தமிழ் மணக்கப் பேசும் பணியாளர்களையும், அவர்களுக்கென இருக்கும் வாழ்வையும் பற்றி நினைத்ததுண்டா? நினைக்க கற்றுத் தருகிறது அங்காடித் தெரு. நூறு பேரை அடித்து வீழ்த்தி, பஞ்ச் டயலாக் பேசி, வெளிநாடுகளில் பாட்டுக்கு நடனம் ஆடும் தல/தளபதி நடிகர்களுக்கும் இவ்வளவு நாள்(வருடங்கள்) விசிலடித்து கை தட்டிய நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சில குறைகள் இருப்பினும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் வரிசையில் இதுவும் உண்டு என தைரியமாய் சொல்லலாம்.





பெரும்பான்மையாய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து, இத்தகைய அடுக்கு மாடி ஸ்டோர்களுக்கு பணி செய்ய அழைத்து வரப்படும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் சிடுக்குகள் நிரம்பிய வாழ்வை ரத்தமும் சதையுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தந்தையை இழந்து கல்லூரி படிப்பு சாத்தியபடாமல் இங்கு பணி புரிய வரும் கதாநாயகனுக்கும், வீட்டின் பொருளாதார சுமை காரணமாக இங்கு பணி செய்யும் கதாநாயகிக்கும் இடையேயான யதார்த்த வாழ்வை, அவர்கள் தங்குமிடத்தில் துவங்கி, உணவு, பணி சுமை, அவர்கள் நடத்தப்படும் முறை என எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

எடுத்துக் கொண்ட கதையும், அதற்கு வலு சேர்க்கும் ஜெயமோகனின் வசனங்களும் காத்திரமாய் இருக்கிறது. ஒன்றி படம் பார்க்கும் எவரையும் உலுக்கும் காட்சிகள் நான்கைந்து உண்டு. புதுமுக நாயகன் நன்றாய் நடித்திருக்கிறார். பருத்தி வீரன் ப்ரியாமணிக்குப் பிறகு ஒரு அடர்த்தியான கதாநாயகி வேடத்தை தன் அபார நடிப்பால் நிறைவாய் செய்திருக்கிறார் அஞ்சலி. சராசரியான ஒளிப்பதிவும், மோசமான பின்னணி இசையும் தரத்தை வெகுவாய் பாதித்தும், தனது கதையால்/உழைப்பால் சரி செய்திருக்கிறார் இயக்குனர். மசாலா பார்முலாக்களில் இருந்து விலகி ஒரு சாதாரண கதையம்சத்துடன் படம் எடுப்பதே சாத்தியமில்லாத தமிழ் சினிமா சூழலில், புதிய மாற்று திசை நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தை இன்னும் முன்னெடுத்து செல்கிறது அங்காடித் தெரு. இம்மண்ணின் மக்கள் நடமாடும் கனமான கதையை கொண்ட இப்படம் விமர்சனங்களால் ஆராயப்பட வேண்டிய படமல்ல.

தமிழ் சினிமா இதுவரை கட்டமைத்த அதிவீர கதாநாயக பிம்பங்களும், அர்த்தமற்ற க்ளிஷேக்களும் இப்படத்தின் வெற்றியில் உடைந்து நொறுங்கட்டும். வசந்தபாலனுக்கும் அவருடைய உதவி இயக்குனர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

வனம் புகுதலின் துவக்கம்



"
கிழக்குச் சீமையிலே" படத்தில் விஜயகுமார் Vs நெப்போலியன் பஞ்சாயத்து காட்சியின்போது, 'தாய் மாமா' எனும் உறவின் பெருமைகளை பக்கம் பக்கமாக ரவுண்ட் ட்ராலி ஷாட்டில் விஜயகுமார் பேசும் வசனங்களை கவனத்துடன் நினைவு கூர்கிறேன். 'ஏன்'னு கேக்குறீங்களா ? சிச்சுவேஷன் அப்படி. மிக மகிழ்ச்சியான சேதி. தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சென்ற வாரம். தாயும் சேயும் நலம்.
பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை என் கைகளில் ஏந்துவது இதுதான் என் வாழ்வின் முதல் முறை.
குழந்தை அவ்வளவு அழகு. என் தலையை விளையாட்டு மைதானமாக்க இது நாள் வரை கொட்ட வைத்த முடியெல்லாம் மருமகளுக்கு கொடுத்து விட்டார் போலும் கடவுள். தலைமுடி மிக அடர்த்தியாய். பகலெல்லாம் தூங்கி, பின் இரவெல்லாம் அழுகிறாள். பகலில் கண்கள் மூடி தூங்கும் போதும் சில நேரங்களில் புன்னகைக்கிறாள். "கடவுள் அவளுக்கு கதை சொல்லிட்டு இருக்காரு... அதனாலதான் சிரிக்கிறா. நீ டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நில்லு" என்கிறாள் என் தங்கை.


%%%%%%%%%%%%%%%%%%


சென்ற மாதம் ஒரு வாரயிறுதியில்,சென்னை ட்ரெக்கிங் கிளப்(CTC) நண்பர்களுடன்(~25 பேர் ), பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் காடு-மலை என சுற்றி திரிந்தேன் . இந்த CTC என்பது, லாப நோக்கில் இயங்கும் அமைப்பு அல்ல. செலவுகளையும் பொறுப்புகளையும் சமமாய் பங்கிட்டு, தன் முனைப்புள்ள, சுற்று சூழல் அக்கறையுள்ள ஆர்வலர்கள் நிரம்பிய, தனக்கு தானே சீரான விதிகள் வரையறுத்து கொண்டு மலையேறும்/ஊர் சுற்றும் குழு. 80% பொட்டி தட்டும் நண்பர்கள். பல ட்ரெக்கிங் ட்ரிப் அனுபவம் பெற்ற சங்கத்து சிங்கம் பாலா என்னையும் சேர்த்து விட்டான்.


இரண்டு நாட்களில் காடு மலை என 25 கிமீ சுற்றியிருப்போம். போகும் வழியில் ஒரு சின்ன அருவி குளியல், யானை துரத்த தெறித்து ஓட்டம், ஒரு கிராமத்தின்(சேத்துமடை) அரசு பள்ளியில் உடனடி அனுமதி வாங்கி அங்கு 'sleeping bag' உதவியுடன் இரவு உறக்கம், சில அரிய வகை விலங்குகள், சராசரிக்கு அதிகமாய் உடலுழைப்பு கோரும் மலையேற்றம், செங்குத்தான மாற்று பாதை வழியாக கண்ணை கட்டிய மலையிறக்கம்(?!) என்று கலந்து கட்டிய பல அனுபவங்கள். நிறைய கற்றுக் கொண்டேன்.
மதங் கொண்ட யானை துரத்திய நிகழ்வு மரண பயம் என்னவென்று உணர்த்தியது. குளித்து முடித்த பின் சிறு சிறு குழுவாய் பிரிந்து மாலை பொழுதில் அடர் வன சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் வந்த இரண்டு டூ வீலர் அன்பர்கள் "யானை துரத்துது... ஒடுங்க" என எங்கள் நால்வர் குழுவை கடுமையாக எச்சரித்தனர். என்னுடன் இருந்த மூவர் அந்த இரு வண்டிகளில் ஏறி கிளம்ப, ஏறி பதுங்க மேடு எதுவும் இல்லாத அந்த சம தள வனத்தில் தெறித்து ஓட ஆரம்பித்தேன். சாலை வளைவுக்கு பின்னிருந்து பிளிறல் சத்தம். என்ன புண்ணியமோ... எச்சரித்து முன் சென்ற TVS50 காரர் மீண்டும் நிறுத்தி என்னையும் ஏற்றி கொள்ள தப்பித்தேன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன். இந்த குழுவில் சேரும் போதே, "எந்த விதமான சேதாரத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல" அப்படின்னு சொல்லி ஒப்புதல் வாங்கிட்டுதான் சேர்ப்பாய்ங்க. நியாயம்தான பாஸ்?


%%%%%%%%%%%%%%%%%%


வி.தா.வருவாயா பாடல்கள் வந்ததுலேர்ந்து ரெக்கார்டு தேயத்தேய கேட்டாச்சு. முதல்ல கொஞ்சம் பிடித்த இப்படத்தின் இசை, ஒரு புள்ளியில் சுற்றி வளைத்து உள்ளிழுத்து கொண்டது. 'ஹோசானா' , 'ஓமனப் பெண்ணே' மற்றும் 'மன்னிப்பாயா' எனக்கு பிடிச்சது. மற்ற பாட்டுகளும் நல்லாயிருக்கு. 'ஆரோமலே'ன்னு ஒரு புது வெரைட்டி பாட்டு. அசத்துகிறார் அற்புத ரகுமான். படம் சீக்கிரம் பார்க்கணும். நான் மிகவும் எதிர்ப்பார்த்த தாமரை ஒரு சில இடங்களில் 'அட' போட வெச்சாலும், எதிர்பார்த்த அளவிற்கோ(அ) 'வாரணம் ஆயிரம்' அளவிற்கோ கலக்கவில்லை.
ஸ்ரேயா கோஷல் பற்றிய என்னோட ட்விட்டர் கமெண்ட்:
உலகின் உயர்தர ஒயின் வகைகளை சுவைக்க வேண்டும் என ஆர்வம் உண்டு. இன்னும் கைகூடவில்லை. வி.தா.வ படத்தின் "மன்னிப்பாயா ..." பாடலில்...ஸ்ரேயா கோஷல் குரலை கேட்ட பின்பு அந்த ஒயின் வகைகள் இப்படித்தான் இருக்குமோவென நினைத்துக் கொள்கிறேன்.


%%%%%%%%%%%%%%%%%%


Strokes of Love

பகல் பொழுதுகளில், மெதுவாய்
கூடுகள் சுமந்தலையும் சிறு நத்தைக் கூட்டத்திற்கு
நிழல் பரப்பி இணையாய் நகர்ந்து
வெப்பம் தணிக்கிறாள் ஒரு சிறுமி.

மழை நாளொன்றில் ஒற்றைக் குடையை
மகனுக்களித்து விட்டு,
சேலைத் தலைப்பால் தலை மூடி நனைந்து கொண்டே
மகனுடன் சாலை கடக்கிறாள் இளம் தாயொருத்தி.

இரை தேடித் திரியும் அணிலைக் கையிலெடுத்து
தன் சட்டை
நுனியில் பால் நனைத்து
துளிகளாய்ப் பிழிந்து ஊட்டுகிறார்
நடைபாதையில் வசிக்கும் முதியவரொருவர்.

துயருறும் பொழுதுகளிலெல்லாம்
விழி மூடி மடி சாய
முடி கோதி முத்தங்கள் தர
வேண்டும் உனைப்போல் காதலியொருத்தி.

இவர்களைப் போன்ற சிலர் தரும்
பேரன்பு எனும் விசையால்
இன்னும் சமன் குலையாமல்,
சுழன்று கொண்டிருக்கிறது ஓர் உலகம்.


பாஸ்... பாஸ். கோபப் படாதீங்க. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்சன். என்னோட அலுவலகத்தில "இது காதல் வாரம்" அப்படின்னு மெயில் விளம்பரம் பண்ணி பல போட்டிகள் நடத்தினாய்ங்க. ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகள் ஐந்தில் கவிதை போட்டி வேற. விட்ருவோமா? பச்சை மஞ்ச கருப்பு பிங்க் தமிழனாகிய நான், தமிழ் பிரிவில் கலந்துகிட்டு கொடுத்த தலைப்புக்கு தாவாங்கட்டைய தடவி யோசிச்சு யோசிச்சு எழுதினதுதான் மேலே. கவிதைங்குற பெயரில் நான் பண்ண இந்த அராஜகத்துக்கு ரெண்டாவது இடம் வேற... எப்பூடி? பரிசு தான் இன்னும் கொடுக்கல. 'Cinthol' சோப்பு வைக்கிறதுக்கு வகையா ஒரு சோப்பு டப்பாவை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். :)

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட