கடமை தவறாத என் அறைத் தோழர்கள் இருவரும் நேற்று (ஜன-17, சனி) அலுவலகம் சென்று விட்டதால், புத்தகக் கண்காட்சிக்கு 'தனியாய் சென்று அல்லல்படுவாயாக' என சபிக்கப்பட்டேன்.
சென்ற வாரம்(சனி/ஞாயிறு) செல்ல முடியாத அளவுக்கு ஐ யாம் வெரி பிசி. இந்த வாரம் நண்பர்களை கூப்பிட்டால் என்னை விட "பிசி எபக்ட்" குடுத்து அலுவலகம் சென்று விட்டார்கள்(அவிய்ங்க ஏற்கனவே போயிட்டு வந்துட்டாய்ங்க... அதான் முக்கிய காரணம்).
அதிகாலை 11.00 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து விட்டு, சனி நீராடி, உடை உடுத்தி, 'சரவணா' வில் உண்டு முடித்து, இரண்டு பேருந்துகள் மாறி, சிக்னல் மதிக்காமல் சாலை கடந்து பு.க வளாகத்தை அடைய மணி 2.30 . 
இந்த வருடம் பெரிதாய் குறைபட்டுக்கொள்ள ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல ஏற்பாடு. தாகத்திற்கு தண்ணீர், சந்தேகம் தீர்க்க 'enquiery counter' மற்றும் ஸ்டால் எண்களுடன் வளாக வரைபடம் , அவ்வப்போது ஒலிபெருக்கி அறிவிப்புகள், உலக சினிமா காட்ட ஒரு திரை என பு.கா ஒவ்வொரு வருடமும் மெருகேறுகிறது.
உள் நுழைந்ததும் வலது கோடியிலுள்ள 'கீழைக் காற்று' ஸ்டாலில் துவங்கினேன். பின் சமையல், கோல, ஆன்மிக, சுய முன்னேற்ற, ஆங்கில புத்தகங்கள் விற்கும் கடைகளைக் கவனமாய்த் தவிர்த்து பிடித்த ஸ்டால்கள் ஒவ்வொன்றாய் அலசினேன்.
ஆழி, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, தமிழினி மற்றும் இன்ன பிற என சுற்றித் திரிந்தேன்.
காலச்சுவடு - மிக அருமையான அரங்க அமைப்பு. நல்ல நூல்களும் கூட...
தமிழினி - எழுத்தாளர்களின் கம்பீரமான பெரிய படங்களை தொங்க விட்டு, நல்ல நல்ல புத்தகங்கள் வைத்திருந்தார்கள். தினத்தந்தி சினிமா செய்திகளை பரம்பரை பரம்பரையாய் படிப்பவர்களும், மானாட மயிலாடுவதை குடும்பத்துடன் கண்டு களிக்கும் மேன்மக்களும், நமீதாவுக்கு கோயில் கட்டும் முரட்டு பக்தர்களும் நிறைந்த தமிழ் கூறும் நல்லுலகின் ரசனை, இப்படி எழுத்தாளர்களை விளம்பரம் செய்து வாசகர்கள் கவரப்படும் அளவிற்கு மாறி விட்டதோ என ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. (இந்த ஸ்டாலில் இருந்த எழுத்தாளர் நாஞ்சில்நாடனிடம் ஒரு புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கிட்டோம்ல...)
உயிர்மை - மொத்தம் நான்கைந்து பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களே 85% ஆக்கிரமித்திருந்தன. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ரசிகர்கள் தன்னை 'உயிர்மை'யில் சந்திக்கலாம் என வலை மனையில் கூறியிருந்தார். அங்கு சென்று உயிர்மை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டால் 'சொல்லியிருந்தார்...வரணும்.. இன்னும் ஆளை காணோம்' என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
கிழக்கு - பிடித்த பதிப்பகம். நல்ல கூட்டம். உங்கள் செல்பேசி எண்ணை எழுதி அங்கேயுள்ள பெட்டியில் போட்டால் புது புத்தகம் வெளியிட்டால் குறுஞ்செய்தி அனுப்புவதாக சொன்னார்கள். காசா... பணமா.... என் எண்ணை எழுதி கடாசியாகி விட்டது. சென்ற வருடம் இங்கு சந்தித்த எழுத்தளர் பா.ராகவன் சிறிய விபத்தில் சிக்கி இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பதாகத் தன் வலை மனையில் கூறியிருந்தார். விரைவில் நலம் பெறுவார் என வேண்டி கொள்வோம்.
ஆனந்த விகடன் - செம கூட்டம். பட்டய கிளப்புறாய்ங்க...
ரேடியோ மிர்ச்சி ஸ்டாலில் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பரிசு என்றார்கள். கிரிக்கெட் பிட்ச் இரு கோடியிலும் இருக்கும் ஸ்டம்ப்களுக்கிடையேயான தூரம் என்ன என்ற முதல் கேள்விக்கு '26' மீட்டர் என சரியாக ஒரு கேவலமான பதிலை சொல்லி 'பல்ப்' வாங்கினேன்.
மிக சிறியது, சிறியது மற்றும் பெரியதுமாக சுமார் 25+ புத்தகங்கள் வாங்கியாகி விட்டன. மாலையில் அலுவலகம் முடித்து என்னை சந்திக்க பு.க வந்த அறைத்தோழன் ராஜாவின் வன்மையான கண்டனத்திற்குட்பட்டு, "கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ" என நானே திகிலாகி, மீண்டும் ஒரு முறை தமிழினி-க்குச் சென்று அ.முத்துலிங்கத்தின் கட்டுரை தொகுப்பு ஒன்றுடன் எனது அலப்பறையை 8 மணிக்கு முடித்து கொண்டு வீடு திரும்பினோம்.
திரும்பும் போது தான் யோசித்தேன், முழுமையாய் 5 மணி நேரம் சுற்றியும் எந்த ஒரு தொந்தரவும் என் கவனத்தை கலைக்கவில்லை( ஒலி பெருக்கி சத்தம், பசி... அட இவ்வளவு ஏங்க... எங்கெங்கு காணினும் நிறைந்து இருந்த பெண்கள் உட்பட). கர்ம சிரத்தையாய் ஒரு காரியம் முடித்ததாய் ஒரு நிறைவு.
"நீ அம்புட்டு நல்லவனாடா" -ன்னு நீங்க கொலை வெறில கேக்குறது என் காதில விழுகுது... நான் அந்த அளவுக்கு நல்லவன் இல்லேனாலும்... வடிவேலு சொல்றது மாதிரி "லைட்ட்ட்ட்ட்டா...!!!" :)
பின் குறிப்பு:
தலைப்புல இருக்கிற "அழுக்கு ஜீன்ஸ்" உள்ள வரலையேன்னு யோசிக்கிறீங்களா??? அது சும்மா ஒரு மொக்கை பில்ட்-அப்பு... ப்ரீயா விடுங்க!!
அழுக்கு ஜீன்சும், சென்னை புத்தகக் கண்காட்சியும்
Labels: புத்தகக் கண்காட்சி , புத்தகம் , மொக்கை Download As PDF
சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5

துயில் கலைந்த ஓர் இரயில் பயண பின்னிரவில்,
ரசித்து மனம் நனையலாம்.
எதிர் இருக்கை சிறுமிக்காக
பதில்கள் தேடலாம்.
தேநீர்கிடைக்கத் தவமிருக்கலாம்.
என் ஏழாவது கவிதையை விட சிறந்த
ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்.
உன் முத்தங்களின் மகரந்தம்,
என் சுற்று வளியை ஆட்கொள்கிறது.
நான் கவிதைக்கான வார்த்தைகள்
கோர்க்கத் துவங்குகிறேன்.
Labels: கவிதை , கிட்டதட்ட கவிதை மாதிரி Download As PDF
சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 4

சாலை கடக்கையில் இறுகக்
கரம் பற்றிக் கொள்வாய்
சில நிமிடப் பேருந்து பயணத்திலும்
தோள் சாயத் தவறுவதில்லை
ஒன்றாய்த் தேநீர் அருந்திய
பின்பனிக் கால மாலை வேளைகள்
வலியுணர்த்த ஒவ்வொன்றுமே அதனளவில்
முழுமையான காரணங்கள்.
என் வீட்டுத் தொட்டிச் செடி
இலைகள் உதிர்க்கத் துவங்கியாயிற்று...
நாளையேனும் வா!!!
Labels: கவிதை , கிட்டதட்ட கவிதை மாதிரி Download As PDF
சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 3
வழக்கமாய்க் கிடைக்கும் நெருக்கமும் ஸ்பரிசமும் இழந்து,
உதிர்ந்து கிடக்கும் உன் வீட்டு முற்றத்துக் கொடியின்,
அடர் மஞ்சள் நிறப் பூக்கள் மௌனமாய் அறிவிக்கின்றன...
சில நாட்களாய் உன் இருப்பை இழந்த வீட்டின் வெறுமையை!!!
.
Labels: கவிதை , கிட்டதட்ட கவிதை மாதிரி Download As PDF
சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 2
அழகாய் நீ சிரிக்க வெளித் தெரியும்
ஒற்றைத் தெற்றுப்பல்,
உன் சீரான பல்வரிசையோடு
அடுத்த சில நிமிடங்களுக்கான
என் இயல்பான செயல்களையும்
கலைத்து விடுகிறது.
Labels: கவிதை , கிட்டதட்ட கவிதை மாதிரி Download As PDF
சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 1

பள்ளி செல்லும் சிறுமி,
ஜோடி நாய்க் குட்டிகள்,
சிதறிய கொன்றை மலர்கள் - என
கார்த்திகை மாத மேகக் கூட்டம்
உருவங்கள் மாறி மாறிக் கடந்து செல்ல
உன்னழைப்பிற்குச் சிணுங்க ஆயத்தமாயிருந்த
அலைபேசியோடு காத்திருந்து,
பின் அதையே இறுகப் பற்றி
தூங்கிப் போகிறேன் ஏமாற்றத்துடன்...
மொட்டை மாடியிலேயே!
Labels: கவிதை , கிட்டதட்ட கவிதை மாதிரி Download As PDF
சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும்
தீபாவளிக்கு ஊருக்கு செல்லததால் சேர்ந்த பாவத்தை தொலைக்க, இரண்டு வாரஙளுக்கு முன்பு ஒரு சுப யோக தினத்தில் ஊருக்கு கிளம்பினேன்... நம்ம டேமேஜர்(அதாங்க மேனேஜர்) கிட்ட பொய் சொல்லி வாங்கின 2 நாள் லீவ் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து இந்த நாலு நாள் ட்ரிப் நல்ல ஒய்வாகவும் அழகாகவும் இருந்தது...
நிம்மதியா, முதல் ரெண்டு நாள் உணவு, ஓய்வு, மாலையில் நகர்வலம்(ஒரு புல்லையும் புடுங்காம நல்லா சாப்பிட்டு ஊர் சுத்துனதைத் தான் இப்படி டீசண்டா சொல்றோம் ) என கழிந்தது. "என்ன ஒரு வாழ்க்கை.. அற்புதம்யா"-ணு இன்னும் மனசு சொல்லிகிட்டே இருக்கு... ;)
அடுத்து நண்பனின் தங்கை திருமணம்... இதில ஒரு நாள் கழிந்தது.
வெயில் இல்லாமல், சில நேரங்களில் சாரலோடு பட்டய கிளப்பின வானிலை...
(இதே நேரத்தில் சென்னையை மழை புரட்டி எடுத்து கொன்டிருந்தது.. எஸ்கப்டா சாமீ)
ஒரு மாற்றமுமில்லாமலிருக்கும் ரத வீதிகள்...
மொட்டை மாடி காற்று...
திருமணத்தில் பாந்தமாய் சேலை உடுத்தி,அடிக்கடி அழகாய் சிரித்து கொண்டிருந்த ஒரு (பெயர் தெரியாத)பெண்.
எல்லாம் ஒரு கலவையா கலந்து கட்டி, நமக்குள்ள தூங்கிட்டிருந்த கவிஞனைத்(!) தட்டி எழுப்பிருச்சு... அப்புறம் எழுத ஆரம்பிச்சு, கடந்த ரெண்டு வாரமா, கவிதைங்ற பேர்ல எழுதி கிழிச்ச எல்லாத்தையும் இங்க ஏத்துறேன். பார்த்துட்டு சொல்லுங்க/திட்டுங்க/அடிங்க/ தப்பி தவறி ஏஎதாவது நல்லா இருந்தா வாழ்த்துங்கள். :)
Labels: பில்டப்பு , மொக்கை Download As PDF
சொற்களைத் தேடி

சரியான சொற்களைத் தேடி
அயர்ந்து வெறுமையாய் திரும்புகிறேன்.
மற்றுமொரு முறை உன் விழிகளை உற்று நோக்க,
எங்கோ முடிவிலியின் விளிம்பில் முளைத்த
செடியின் மலர்கள் உதிர்வதைப் போல
எனக்கான சொற்களை
உன் விழிகள் உதிர்க்க துவங்குகின்றன!
இயன்றவரை எல்லவற்றையும் சேகரித்துக் கொண்டு
சிறுவனுக்குரிய மகிழ்ச்சியுடன்
தொடுவானம் நோக்கி விரைகிறேன்...
முற்றுப் பெறக் காத்திருக்கும் என் கவிதைகளை நிரப்ப!
Labels: கவிதை Download As PDF
பிரிவின் எதிர்பார்ப்புகளுடன்.....

அடுத்த முறை வீசும் காற்றுக்கு,
வீழ்ந்து விடும் சாத்தியமுள்ள
பாதி முறிந்த கிளையொன்றின் மீது கவனம் குவித்து
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.
கூடிக் களித்த கணங்கள் - கோடி
எனினும்,
ஒவ்வாத தருணங்களின் நினைவுகள்
அடிநாக்கில் செறிவான கசப்புச் சுவையை
படர விட்டுக் கொண்டிருக்கிறது தற்சமயம்.
இதுதான் இறுதியான பிரிவாக வேன்டுமென,
என் தரப்பின் எல்லா அபத்த வாதங்களையும் கொண்டு
மனதிற்குள் ஓர் ஒத்திகை
நிகழ்த்தி முடித்தாகி விட்டது.
உன் அருகாமையின் அருமை உணரா
என் உலக போலி நியாயங்கள், சுயநலம்
வஞ்சம், கோபம், கயமை எல்லாம்
வெகு விரைவில் வறண்டு அழியக்கூடும்.
அதற்காகவாவது பிரிந்து போ... இன்றேனும்.
தேவையோ கவனமோ இல்லாவிடினும்...

உச்சி வெயில் தவிர
பிற நேரங்களில்
யாருக்கும் தேவையோ கவனமோ இல்லாவிடினும்
கிழக்கேயும் மேற்கேயும் படிந்து
தேய்ந்து வளர்கிறது நாள்தோறும்...
மரத்தின் நிழல் !
Labels: கவிதை Download As PDF