கவிதைகள் ஜாக்கிரதை

நண்பனொருவன்:
"டேய்... ஏதோ கவிதை போட்டுருக்கேன்னு சொன்ன. ஆனா அந்த லிங்க்ல போயி பார்த்தா கதை மாதிரி எழுதி கடைசில ஆச்சர்யக்குறி வெச்சிருக்கிற?... ஓ... அதுதான் கவிதையா... ஏதோ சுமாரா இருக்குடா"

சங்கத்து ஆள் ஒருத்தன்:
"என்ன பாஸு.... எப்பவுமே ஒரே பீலிங்கா சோகமா எழுதிட்டு இருக்குற. உனக்கு கவிதைய விட அந்த இண்ட்ரோ குடுக்குற மொக்கைதான் நல்லா வருது பாஸு."

தோழியொருத்தி
:
"ஹே சிவா... வழக்கம் போல இந்த கவிதைக்கும் ஃபோட்டோ செம சூப்பர்!"
(இது பாராட்டு கிடையாது. உள்குத்து என்னனா... கவிதைங்கற ஒரு விஷயம் அங்க இல்லாத மாதிரி ஒரு பல்பு குடுக்கிறாங்க )

இதெல்லாம் நம்ம வலைபக்கத்து கவிதையை பார்த்துட்டு கோடானு கோடி(?!) ரசிகப் பெருமக்கள் கிட்ட இருந்து வர்ற ரெஸ்பான்ஸ்ல ஒரு சின்ன சாம்பிள்! ஆனா இதுக்காக நம்ம இலக்கிய சேவையை நிறுத்த முடியுமா?? அதனால.... "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் வேதாளத்தை நெருங்கி..." அப்படின்னு அம்புலிமாமா கதை மாதிரி, நானும் ஒரு வைராக்கியத்தோட நல்ல கவிதை எழுதியே தீருவேன்னு புயலென புறப்பட்டு..............................

என்னங்க இது??
நான்தான் கொசுவர்த்தியை சுத்த விட்டு ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்கை ஓட்டுறேன்... நீங்களும் 'உம்' கொட்டி வாசிச்சிட்டு இருக்குறீங்க. ஹையோ... ஹையோ !!!

உண்மையான காரணம் வேற ஒண்ணும் இல்ல...

இனிமேல் கொஞ்ச நாள் தனிமை, பிரிவுன்னு எழுதி இளையராஜா ட்ரூப் வயலின் மாதிரி பேக்ரவுண்ட்ல சோக கீதம் பாட வேண்டாம்னு நினைச்சேன். சில வலைபக்கங்களில் பார்த்தால் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை எழுதுறாய்ங்க. இவிய்ங்களை (ஸ்ரீமதி, ஒற்றை அன்றில்) பார்த்து இம்ப்ரெஸ் ஆகி இது மாதிரி நாமளும் ஒரு தடவை ரொமான்டிக் லுக்கு விடலாம்னு தோணுச்சு.

அலவலகத்தில் நிறைய ஆணி புடுங்குற வேலை இருந்தாலும், இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரணத்தோட எழுத ஆரம்பிச்சு, வந்து விழுந்த கவிதைகள் கீழே... படிச்சு பார்த்து ஏதாவது தேறுதான்னு சொல்லுங்க.

இனி.... கவிதைகள் ஜாக்கிரதை! ;)

--------------------------------------------------------------------------------------------------------------

அடிவான நட்சத்திரப் புள்ளிகளிணைத்து
எழுத்துக்களாக்கி உன் செல்லப் பெயர்கள்
ஒவ்வொன்றாய்ச் செய்வதுதான்,
இரவு நேர நீள் பயணங்களில்
எனக்கு னிச்சையாய்ப் போன வழக்கம்!
==========================



நீ விழிகள் விரியச் சினங்கொள்ளும் வேளையிலும்,
எனது செயல்கள் கலைத்து நிறுத்தி விட்டு
உதடு சுழித்துச் சிரிக்கையிலும்,
உன்னை இறுகக் கட்டி முத்தமிடும்
எண்ணம் துளிர்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை!
==========================

அலைபாயும் கூந்தலில் விரல்கள் செருகி
இடம் வலமென இரு சிறு கற்றைக் குழல்களெடுத்து
நடுவே பிணைத்துக் கடிவாளமிட்ட உன்
நளினம் கண்ட பொழுதில்,
தறிகெட்டு ஓடத் துவங்குகிறது என் மனம்.

==========================




என் அநேக வேண்டுதல்களை, நீ
மறுத்துப் புறந்தள்ளிச் சென்றாலும்,
உன்னை கோபிக்கத் தெரியாமல்
உன் விழியோர கர்வம் நினைத்து
ரசித்துச் சிரித்துக் கொள்கிறேன்... தனிமையில்.

==========================

நளினமான நடையுடன் சில கணங்களில்
அந்தச் சாலை வளைவைக் கடந்து சென்று விட்டாய்.
இன்னும் உனதழகான வளைவுகளில் சிக்கி
மீள வழியின்றி தவிக்கிறது என் மனம்!!




மாநகரைத் துயிலெழுப்புபவள்




அம்மாவின் விரல் பிடிக்காமல்
அதிகாலைப் பேருந்தின் சற்றே உயரமான படிகளில்
சிறிய மெனக்கெடலுடன் ஏறி
பற்றுதலுக்கான கம்பி நோக்கி விரைவதற்குள்
முன்னகர்ந்த பேருந்தினுள்
தள்ளாடிச் சரியும் சிறுமியின்
இடது முழங்கைச் சிராய்ப்புகளில்
பிறக்கும் பெருங்குரலெடுத்த அழுகையில்
நிசப்தம் உடைந்து துயிலெழுகிறது இம்மாநகரம்!

உனது பிரிவின் பயனாய் மூன்று கவிதைகள்




1.
ஒவ்வொரு அலைவரிசையிலும் ஒத்திசைந்து
அடுத்தடுத்த பண்பலை வானொலியிலும் நின்று
எத்தனை மெல்லிசை கேட்டாலும்
தவிர்க்க முடிவதில்லை
உன் தொலைபேசி அழைப்புகளற்ற
இரவின் மீது கவியும் வெறுமையை!!!


-------------------------------------------------
2.
திகைப்பூட்டும் வேலைப்பளு,
ஏமாற்றம்,
சிறு புன்னகை,
கோபம்,
ஆயாசம்
பயணக் களைப்பு
மற்றும் இன்ன பிறவும் சேர்ந்து -
என விதிக்கப்பட்ட
சராசரி அலுவல் நாளிலும்
என் செயல்கள் நிறுத்தி
புலன்கள் நிறைத்து
மனதின் அடியாழம் கீறி
ரத்தச் சிவப்பு நிறத்தில் குரூரமாய்ப் புன்னகைக்கின்றன...
சென்ற இளவேனிற் காலத்தே நிகழ்ந்த நம் பிரிவும்,
அதற்கு முந்தைய உன் நினைவுகளும்!

-----------------------
3.
உன் நினைவுகளின் நதி
எனது கரைகளை உடைக்குமென
அனுமானிக்கவில்லை.

பார்த்து,கேட்டு மற்றும் உய்த்துணரும்
ஒவ்வொரு அன்றாட நிகழ்விலும்
கண்ணிற்குப் புலப்படா ஒரு தூரிகையால்
உனது தனித்த வர்ணத்தை தீட்டிச் செல்கிறாய்.

உன் நினைவுகளின் நிழல் படரா அன்றாடம்
என்பது முற்றிலும் சாத்தியமில்லை போலும்.

வீசும் காற்று,
தடுப்பில் மோதி எதிர்த்திசை திரும்பும் காற்றுடன்
மூர்க்கமாய்க் கலந்து சுழலுகையில்
நடுவே சிக்கித் தவித்துத்
திசையற்றுச் சுற்றியலையும்
துண்டுக் காகிதமாய் என் மனம்... இப்பொழுதில்.

===========================================================================

பின்னுரை:

மூன்று தனித் தனிக் கவிதைகளாக இருந்தாலும், அதை மனதில் நினைக்காமல் படித்த பொழுது மூன்றும் சேர்ந்து ஒரே கவிதையாகவும் எனக்கு தோன்றியது. உங்களுக்கு எப்படி??? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

"இதெல்லாம் சரி... ஏன் ஒரே மாதிரி பிரிவு, தனிமை, நினைவு அப்படினு ஒரே பரோட்டவை இவ்வளோ காலமா திருப்பி திருப்பி போடுற?"ன்னு கேக்குறீங்களா?
அது என்னமோ தெரியலைங்க... சின்ன வயசுல இருந்து "பிரிவு" அப்படிங்கறது நம்மளை ரொம்ப பாதிச்ச விஷயமாவே இருந்துட்டு வருது...
ரெண்டாம் வகுப்பு படிக்குறப்போ நான் வளர்த்த கோழி குஞ்சை காக்கா தூக்கிட்டு போன சம்பவத்துல துவங்கி, போன மாசம் திடீர்னு குடும்பத்தோட வீட்டை காலி பண்ணிட்டு போன பக்கத்து பிளாட் மாமாவோட பொண்ணு வரைக்கும் நம்ம உணர்வுகளோட விளையாடுற மாதிரி ஏதாவது பிரிவு அப்பப்போ நடந்துட்டே இருக்கு.

அதனால நானே கட்டுபடுத்தணும்னு நினைச்சாலும் தானா இந்த டாபிக் பக்கமா மனசு ஒடுது. நம்ம வலைப்பக்கமும் சோக மயமாய் பிரிவும் பிரிவு சார்ந்த பாலைத் திணை மாதிரி காட்சியளிக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வேற மாதிரி எழுதலாமான்னு(அதாவது... கவிதைங்ற பேர்ல வேற ஏதாவது விஷயத்தைப் பத்தி) யோசிச்சிட்டு இருக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கும்னு?

ஒரு நிமிஷம் பாஸு... இன்னும் ஏன் அந்த பக்கத்து வீட்டு மாமா பொண்ணை நினைச்சிட்டு இருக்றீங்க? நானே மறந்துட்டேன்... உங்களுக்கு என்ன பீலிங் வேண்டி இருக்கு? :)
அது சும்மா ஒரு 'Comedy Element'க்காக சேர்த்தது(ஆனா கோழிக்குஞ்சு மேட்டர் உண்மை)... அதுக்கும் இந்த கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.... இது வேற பீலிங் பாஸு.!

அழுக்கு ஜீன்சும், சென்னை புத்தகக் கண்காட்சியும்

கடமை தவறாத என் அறைத் தோழர்கள் இருவரும் நேற்று (ஜன-17, சனி) அலுவலகம் சென்று விட்டதால், புத்தகக் கண்காட்சிக்கு 'தனியாய் சென்று அல்லல்படுவாயாக' என சபிக்கப்பட்டேன்.
சென்ற வாரம்(சனி/ஞாயிறு) செல்ல முடியாத அளவுக்கு ஐ யாம் வெரி பிசி. இந்த வாரம் நண்பர்களை கூப்பிட்டால் என்னை விட "பிசி எபக்ட்" குடுத்து அலுவலகம் சென்று விட்டார்கள்(அவிய்ங்க ஏற்கனவே போயிட்டு வந்துட்டாய்ங்க... அதான் முக்கிய காரணம்).

அதிகாலை 11.00 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து விட்டு, சனி நீராடி, உடை உடுத்தி, 'சரவணா' வில் உண்டு முடித்து, இரண்டு பேருந்துகள் மாறி, சிக்னல் மதிக்காமல் சாலை கடந்து பு.க வளாகத்தை அடைய மணி 2.30 .






இந்த வருடம் பெரிதாய் குறைபட்டுக்கொள்ள ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல ஏற்பாடு. தாகத்திற்கு தண்ணீர், சந்தேகம் தீர்க்க 'enquiery counter' மற்றும் ஸ்டால் எண்களுடன் வளாக வரைபடம் , அவ்வப்போது ஒலிபெருக்கி அறிவிப்புகள், உலக சினிமா காட்ட ஒரு திரை என பு.கா ஒவ்வொரு வருடமும் மெருகேறுகிறது.

உள் நுழைந்ததும் வலது கோடியிலுள்ள 'கீழைக் காற்று' ஸ்டாலில் துவங்கினேன். பின் சமையல், கோல, ஆன்மிக, சுய முன்னேற்ற, ஆங்கில புத்தகங்கள் விற்கும் கடைகளைக் கவனமாய்த் தவிர்த்து பிடித்த ஸ்டால்கள் ஒவ்வொன்றாய் அலசினேன்.
ஆழி, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, தமிழினி மற்றும் இன்ன பிற என சுற்றித் திரிந்தேன்.

காலச்சுவடு - மிக அருமையான அரங்க அமைப்பு. நல்ல நூல்களும் கூட...

தமிழினி - எழுத்தாளர்களின் கம்பீரமான பெரிய படங்களை தொங்க விட்டு, நல்ல நல்ல புத்தகங்கள் வைத்திருந்தார்கள். தினத்தந்தி சினிமா செய்திகளை பரம்பரை பரம்பரையாய் படிப்பவர்களும், மானாட மயிலாடுவதை குடும்பத்துடன் கண்டு களிக்கும் மேன்மக்களும், நமீதாவுக்கு கோயில் கட்டும் முரட்டு பக்தர்களும் நிறைந்த தமிழ் கூறும் நல்லுலகின் ரசனை, இப்படி எழுத்தாளர்களை விளம்பரம் செய்து வாசகர்கள் கவரப்படும் அளவிற்கு மாறி விட்டதோ என ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. (இந்த ஸ்டாலில் இருந்த எழுத்தாளர் நாஞ்சில்நாடனிடம் ஒரு புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கிட்டோம்ல...)

உயிர்மை - மொத்தம் நான்கைந்து பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களே 85% ஆக்கிரமித்திருந்தன. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ரசிகர்கள் தன்னை 'உயிர்மை'யில் சந்திக்கலாம் என வலை மனையில் கூறியிருந்தார். அங்கு சென்று உயிர்மை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டால் 'சொல்லியிருந்தார்...வரணும்.. இன்னும் ஆளை காணோம்' என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

கிழக்கு - பிடித்த பதிப்பகம். நல்ல கூட்டம். உங்கள் செல்பேசி எண்ணை எழுதி அங்கேயுள்ள பெட்டியில் போட்டால் புது புத்தகம் வெளியிட்டால் குறுஞ்செய்தி அனுப்புவதாக சொன்னார்கள். காசா... பணமா.... என் எண்ணை எழுதி கடாசியாகி விட்டது. சென்ற வருடம் இங்கு சந்தித்த எழுத்தளர் பா.ராகவன் சிறிய விபத்தில் சிக்கி இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பதாகத் தன் வலை மனையில் கூறியிருந்தார். விரைவில் நலம் பெறுவார் என வேண்டி கொள்வோம்.

ஆனந்த விகடன் - செம கூட்டம். பட்டய கிளப்புறாய்ங்க...

ரேடியோ மிர்ச்சி ஸ்டாலில் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பரிசு என்றார்கள். கிரிக்கெட் பிட்ச் இரு கோடியிலும் இருக்கும் ஸ்டம்ப்களுக்கிடையேயான தூரம் என்ன என்ற முதல் கேள்விக்கு '26' மீட்டர் என சரியாக ஒரு கேவலமான பதிலை சொல்லி 'பல்ப்' வாங்கினேன்.

மிக சிறியது, சிறியது மற்றும் பெரியதுமாக சுமார் 25+ புத்தகங்கள் வாங்கியாகி விட்டன. மாலையில் அலுவலகம் முடித்து என்னை சந்திக்க பு.க வந்த அறைத்தோழன் ராஜாவின் வன்மையான கண்டனத்திற்குட்பட்டு, "கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ" என நானே திகிலாகி, மீண்டும் ஒரு முறை தமிழினி-க்குச் சென்று அ.முத்துலிங்கத்தின் கட்டுரை தொகுப்பு ஒன்றுடன் எனது அலப்பறையை 8 மணிக்கு முடித்து கொண்டு வீடு திரும்பினோம்.

திரும்பும் போது தான் யோசித்தேன், முழுமையாய் 5 மணி நேரம் சுற்றியும் எந்த ஒரு தொந்தரவும் என் கவனத்தை கலைக்கவில்லை( ஒலி பெருக்கி சத்தம், பசி... அட இவ்வளவு ஏங்க... எங்கெங்கு காணினும் நிறைந்து இருந்த பெண்கள் உட்பட). கர்ம சிரத்தையாய் ஒரு காரியம் முடித்ததாய் ஒரு நிறைவு.
"நீ அம்புட்டு நல்லவனாடா" -ன்னு நீங்க கொலை வெறில கேக்குறது என் காதில விழுகுது... நான் அந்த அளவுக்கு நல்லவன் இல்லேனாலும்... வடிவேலு சொல்றது மாதிரி "லைட்ட்ட்ட்ட்டா...!!!" :)

பின் குறிப்பு:
தலைப்புல இருக்கிற "அழுக்கு ஜீன்ஸ்" உள்ள வரலையேன்னு யோசிக்கிறீங்களா??? அது சும்மா ஒரு மொக்கை பில்ட்-அப்பு... ப்ரீயா விடுங்க!!

சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5




துயில் கலைந்த ஓர் இரயில் பயண பின்னிரவில்,

கதவருகில் நின்று மழைச் சாரல்
ரசித்து மனம் நனையலாம்.
கேள்விகள் கேட்டுத் தூங்கிப் போன
எதிர் இருக்கை சிறுமிக்காக
பதில்கள் தேடலாம்.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு கோப்பை
தேநீர்கிடைக்கத் தவமிருக்கலாம்.
உன் முதல் முத்தங்களை சாத்தியப்படுத்திய
என் ஏழாவது கவிதையை விட சிறந்த
ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்.

இந்த அகாலத்திலும் எங்கிருந்தோ
உன் முத்தங்களின் மகரந்தம்,
என் சுற்று வளியை ஆட்கொள்கிறது.
நான் கவிதைக்கான வார்த்தைகள்
கோர்க்கத் துவங்குகிறேன்.




சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 4






சாலை கடக்கையில் இறுகக்
கரம் பற்றிக் கொள்வாய்
சில நிமிடப் பேருந்து பயணத்திலும்
தோள் சாயத் தவறுவதில்லை
ஒன்றாய்த் தேநீர் அருந்திய
பின்பனிக் கால மாலை வேளைகள்

இவையனைத்தும் சேர்ந்து அல்ல -
வலியுணர்த்த ஒவ்வொன்றுமே அதனளவில்
முழுமையான காரணங்கள்.
என் வீட்டுத் தொட்டிச் செடி
இலைகள் உதிர்க்கத் துவங்கியாயிற்று...
நாளையேனும் வா!!!



சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 3




வழக்கமாய்க் கிடைக்கும் நெருக்கமும் ஸ்பரிசமும் இழந்து,
உதிர்ந்து கிடக்கும் உன் வீட்டு முற்றத்துக் கொடியின்,
அடர் மஞ்சள் நிறப் பூக்கள் மௌனமாய் அறிவிக்கின்றன...
சில நாட்களாய் உன் இருப்பை இழந்த வீட்டின் வெறுமையை!!!



.

சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 2

அழகாய் நீ சிரிக்க வெளித் தெரியும்
ஒற்றைத் தெற்றுப்பல்,
உன் சீரான பல்வரிசையோடு
அடுத்த சில நிமிடங்களுக்கான
என் இயல்பான செயல்களையும்
கலைத்து விடுகிறது.

சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 1


பள்ளி செல்லும் சிறுமி,
ஜோடி நாய்க் குட்டிகள்,
சிதறிய கொன்றை மலர்கள் - என
கார்த்திகை மாத மேகக் கூட்டம்
உருவங்கள் மாறி மாறிக் கடந்து செல்ல
உன்னழைப்பிற்குச் சிணுங்க ஆயத்தமாயிருந்த
அலைபேசியோடு காத்திருந்து,
பின் அதையே இறுகப் பற்றி
தூங்கிப் போகிறேன் ஏமாற்றத்துடன்...
மொட்டை மாடியிலேயே!




சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும்

தீபாவளிக்கு ஊருக்கு செல்லததால் சேர்ந்த பாவத்தை தொலைக்க, இரண்டு வாரஙளுக்கு முன்பு ஒரு சுப யோக தினத்தில் ஊருக்கு கிளம்பினேன்... நம்ம டேமேஜர்(அதாங்க மேனேஜர்) கிட்ட பொய் சொல்லி வாங்கின 2 நாள் லீவ் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து இந்த நாலு நாள் ட்ரிப் நல்ல ஒய்வாகவும் அழகாகவும் இருந்தது...

நிம்மதியா, முதல் ரெண்டு நாள் உணவு, ஓய்வு, மாலையில் நகர்வலம்(ஒரு புல்லையும் புடுங்காம நல்லா சாப்பிட்டு ஊர் சுத்துனதைத் தான் இப்படி டீசண்டா சொல்றோம் ) என கழிந்தது. "என்ன ஒரு வாழ்க்கை.. அற்புதம்யா"-ணு இன்னும் மனசு சொல்லிகிட்டே இருக்கு... ;)

அடுத்து நண்பனின் தங்கை திருமணம்... இதில ஒரு நாள் கழிந்தது.

வெயில் இல்லாமல், சில நேரங்களில் சாரலோடு பட்டய கிளப்பின வானிலை...
(இதே நேரத்தில் சென்னையை மழை புரட்டி எடுத்து கொன்டிருந்தது.. எஸ்கப்டா சாமீ)
ஒரு மாற்றமுமில்லாமலிருக்கும் ரத வீதிகள்...
மொட்டை மாடி காற்று...
திருமணத்தில் பாந்தமாய் சேலை உடுத்தி,அடிக்கடி அழகாய் சிரித்து கொண்டிருந்த ஒரு (பெயர் தெரியாத)பெண்.

எல்லாம் ஒரு கலவையா கலந்து கட்டி, நமக்குள்ள தூங்கிட்டிருந்த கவிஞனைத்(!) தட்டி எழுப்பிருச்சு... அப்புறம் எழுத ஆரம்பிச்சு, கடந்த ரெண்டு வாரமா, கவிதைங்ற பேர்ல எழுதி கிழிச்ச எல்லாத்தையும் இங்க ஏத்துறேன். பார்த்துட்டு சொல்லுங்க/திட்டுங்க/அடிங்க/ தப்பி தவறி ஏஎதாவது நல்லா இருந்தா வாழ்த்துங்கள். :)





இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட